15 நாள் “டைம்”.. அதற்குள் சரணடையனும்! கொரோனாவால் விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆர்டர்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் விசாரணை கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
கடந்த 2019 ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று இன்று வரை விடாமல் மக்களை விரட்டிக் கொண்டே உள்ளது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சிடி ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

சிறையில் கொரோனா
அதாவது கொரோனா பரவல் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் சிறையில் இருக்கும் கைதிகளை சமாளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தமிழ்நாடு உட்பட பல சிறைகளில் கைதிகளுக்கும் கொரோனா பரவல் ஏற்பட்டது. நெருக்கமாக மக்கள் வாழும் இடமான சிறைகளில் கொரோனா பரவுவது மிகவும் எளிதாக இருந்தது.

சிறைவாசிகளுக்கு சிறப்பு ஜாமீன்
இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு அடைக்கப்பட்டு இருந்த மிகவும் கொடூர குற்றங்களில் ஈடுபடாத குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றம் அமைத்த உயர்மட்டக்குழு அமைத்த பரிந்துரையின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

15 நாட்களில் சரணடைய வேண்டும்
இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் விடுவிக்கப்பட்ட சிறைவாசிகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சிடி ரவிக்குமார் அமர்வு, கொரோனா காலக்கட்டத்தில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் விசாரணை கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை நாடலாம்
கொரோனா காலத்தில் அவசர ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அனைவரும் சரணடைந்த பிறகு தங்களுக்கு உரிய நீதிமன்றங்களை அணுகி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும் நீதிமன்றங்களில் முறையிட உச்சநீதிமன்றம் அனுமதித்து உள்ளது.

உயரும் கொரோனா பாதிப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த நான்கரை மாதங்களை காட்டிலும் நேற்று கொரோனா பாதிப்பு 1,300 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது 7,927 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications