தலையை மொட்டையடித்து, கைம்பெண் போல் வாழ்வேன்.. சோனியாவுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் போட்ட சபதம்!
Recommended Video
டெல்லி: தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வெள்ளை புடவை கட்டிக்கொண்டு, கணவரை இழந்த கைம்பெண் போல் வாழ்வேன் என்று சுஷ்மா சுவராஜ் சபதம் செய்த ஒரு நிகழ்வு பற்றி உங்களுக்கு தெரியுமா?
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் சுஷ்மா சுவராஜ், அமைதி கலைத்து, ஆவேசம், ஆக்ரோஷமாக இவ்வாறு ஒரு சபதத்தை போட்டது 2004ஆம் ஆண்டு.
கணவருடன் வாழ்ந்த சுஷ்மா சுவராஜ், இப்படி ஒரு சபதத்தை ஆவேசமாக போடுவதற்கு காரணம், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

சோனியா பிரதமர்
ஆனால், இப்படி ஒரு சபதம் போடப்பட்டது உண்மைதான். அதுகுறித்த ஒரு குட்டி பிளாஷ்பேக்: 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. காங்கிரசின் அத்தனை தலைவர்களும் சோனியா காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என்று ஒருமித்த குரலில் கூப்பிட்ட காலகட்டமும் அதுதான்.

வெளிநாடு
இதனால்தான் ஆவேசமடைந்தார் சுஷ்மா சுவராஜ். ஒரு வெளிநாட்டுக்காரர் எனது இந்திய நாட்டை ஆள்வது எனது உணர்வுகளை நொறுக்கிப் போடுகிறது என்றார் அவர். வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்த நாட்டு மக்கள் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ஆனால், இப்போது நமது நாட்டை ஆள்வதற்கு நம்மிடமே ஆள் கிடையாதா, ஒரு வெளிநாட்டுக்காரர் தான் தலைவராக வேண்டுமா என்று ஆவேசமாக கேட்டார் சுஷ்மா ஸ்வராஜ்.

எளிய வாழ்க்கை
ஒருவேளை சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார் நான் எனது தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன். வெள்ளை சேலை கட்டிக் கொள்கிறேன். பஞ்சு மெத்தையை தவிர்த்துவிட்டு, கட்டாந்தரையில்தான் படுப்பேன். வெறும் தானியங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளுவேன், என்று மிகப்பெரிய சபதத்தை எடுத்தார் சுஷ்மா சுவராஜ்.

மன்மோகன் சிங்
சுஷ்மா சுவராஜுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்கவில்லை சோனியா காந்தி. மன்மோகன்சிங்கை பிரதமராக அழைப்புவிடுத்தார் அவர். இதன் பிறகு பத்தாண்டுகாலம் மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்தார் என்பது வரலாறு. சோனியா காந்தி அதன் பிறகு இதுவரை, எப்போதுமே பிரதமராகும் வாய்ப்பு அமையவில்லை. இதனால் சுஷ்மா சுவராஜ் தனது ஆவேச சபதத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. அந்த வகையில் பாஜக தொண்டர்களுக்கு அது நிம்மதி தான்.












Click it and Unblock the Notifications