உலகில் பழமையான மொழியே தமிழ் தான்! இது இந்தியர்களின் மொழி! உருகிய பிரதமர் மோடி.. டெல்லியில் பெருமை
டெல்லி: ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, தமிழ் நமது மொழி; உலகில் பழமையான மொழியாக தமிழ் உள்ளது என பெருமையாக கூறியதோடு, பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டதற்கான காரணங்களையும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 19 ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

முதலாவதாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி ஜி 7 மற்றும் குவாட் மாநாட்டில் பங்கேற்றார். அதன்பிறகு பப்புவா நியூ கினியாவில் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி விசிட் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த வேளையில் அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். மேலும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி பிரதமர் மோடியை பாஸ் என புகழ்ந்தார். பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மாரப், பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கி சிறப்பான வரவேற்பு அளித்தார்.
பப்புவா நியூ கினியாவை பொறுத்தமட்டில் சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு உலக நாடுகளில் தலைவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது இல்லை. ஆனால் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மாரப் நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
மேலும் பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல், சுபா சசீந்திரன் இணைந்து புத்தகத்தை மொழி பெயர்ப்பு செய்து இருந்தனர். இந்த 6 நாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று காலை விமானத்தில் டெல்லி திரும்பினார். பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் இந்தியாவின் கலாசாரம் குறித்து பேசும்போது உலகத்தின் கண்களை பார்க்கிறேன். இந்தியாவில் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்த அதிகாரம் அளித்துள்ளதால் தான் இந்த நம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது. இந்தியா வரும் உலக தலைவர்கள் இந்தியாவை விரும்புகின்றனர். மாறாக பிரதமர் மோடியை அல்ல.
தமிழ் மொழி என்பது நமது மொழி. இது ஒவ்வொரு இந்தியரின் மொழியாகும். அதோடு உலகில் பழமையான மொழியாக தமிழ் உள்ளது. பப்புவா நியூ கினியாவில் ‛டோக் பிசின்' மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட வாய்ப்பு கிடைத்தது.
உலகத்துக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவது பற்றி என்னிடம் மக்கள் கேட்கின்றனர். அவர்களுக்கு இது புத்தர் மற்றும் காந்தியின் பூமி என்பதை கூற விரும்புகிறேன். நாங்கள் எதிரிகளையும் நேசிப்போம் என்பதையும் தெரிவித்து கெள்கிறேன். மேலும் ஒரு சூழலில் இந்தியா என்ன நினைக்கிறது என்பதை அறிய உலகம் விரும்புகிறது.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் மகத்தான பாரம்பரியம் பற்றி பேசும்போது அடிமை மனநிலையில் மூழ்கி விடாதீர்கள். தைரியமாக பேசுங்கள் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் பற்றி அறிய உலகம் ஆவலாக உள்ளது. நமது புனித ஸ்தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என நான் கூறுவதை உலகம் ஏற்றுக்கொள்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications