கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக் போட்டு கொள்ள தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் தயங்குவதாகவும், மிகக் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போடும் பணிகளை நாள்தோறும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
தினந்தோறும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆய்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தமிழகம் மற்றும் கேரளாவில் மோசமாக நடந்து வருவதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

25% குறைவு
25 சதவீதத்திற்கும் குறைவான முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், தமிழகம் மற்றும் கேரளாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் பலரும் தயங்குவதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 மாநிலங்கள்
இதே போன்று பஞ்சாப் மற்றும் சட்டிஸ்கரிலும் தடுப்பூசி போடும் பணி மோசமாக நடந்து வருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 70 சதவீத சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 161 இடங்கள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிபரத்தின்படி, முதல் நாளில், தமிழகத்தில் 161 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்துள்ளது. இதில் 2945 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் 133 இடங்களில் போடப்பட்டதில் 8062 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சட்டிஸ்கரில் 97 இடங்களில் 5592 பேருக்கும், பஞ்சாப்பில் 59 இடங்களில் 1319 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கர்நாடகா
அதே சமயம் முதல் நாளில் ஆந்திராவில் 332 இடங்களில் 18,412 பேருக்கும், கர்நாடகாவில் 242 இடங்களில் 13,594 பேருக்கும், தெலுங்கானாவில் 140 இடங்களில் 3653 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி எத்தனை இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் 7628 பேருக்கும், கேரளாவில் 7070 பேருக்கும், சண்டிகரில் 4459 பேருக்கும், பஞ்சாப்பில் 1882 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications