தடுப்பூசி போடாதவர்களே.. கொரோனா வைரஸ்கள் உருமாறுவதற்கு காரணம்! சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
டெல்லி: கொரோனா வேக்சினை கட்டாயமாக்குவது தொடர்பான அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. குறிப்பாக டெல்டா கொரோனா காரணமாக ஏற்பட்ட 2ஆவது அலையில் இந்தியா மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது.
அதன் பின்னர் ஓமிக்ரான் கொரோனா நாட்டில் 3ஆவது கொரோனா அலையை ஏற்படுத்தியது. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது.

கொரோனா வேக்சின்
இந்நிலையில், கொரோனா வேக்சின் பணிகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதன்படி பொது இடங்களுக்கு வர கொரோனா வேக்சினை கட்டாயமாக்குவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இருப்பினும், வேக்சின் அரசு கட்டாயமாக்கக் கூடாது என்றும் ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

தேவையான நடவடிக்கை
இது தொடர்பான வழக்கில், 1939 சட்டத்தின்படி கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது சரி தான் என்றும் தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் வேக்சின் போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுப்பது சரி தான் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 76இன் கீழ், நோய்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்குச் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. இந்தச் சட்டத்தின்படி கொரோனா வேக்சினை கட்டாயமாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தமிழக அரசு வாதம்
தடுப்பூசிகளைக் கட்டாயப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, "கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் என்ற காரணத்திற்காகவே இந்த உத்தரவை மாநில அரசு வழங்கியுள்ளது. அப்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க முடியும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
மேலும், தடுப்பூசி போடாதவர்களே கொரோனா வைரஸ்கள் உருமாறுவதற்குக் காரணம் என நிபுணர்கள் ஆய்வுகள் செய்து கூறியிருக்கின்றனர் என்றும் இதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசியைக் கட்டாயமாக்கியுள்ளோம் என்று வாதிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம், 1939 இன் கீழ் தான் பொதுச் சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்றும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications