பெண்ணையாறு நடுவர் மன்றம்: மத்திய பாஜக அரசு மீண்டும் துரோகம்-உச்சநீதிமன்றத்தில் தமிழகம் எதிர்ப்பு!
டெல்லி: தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமல் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டு தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இத்தனைக்கும் காவிரி நடுவர் மன்றம் அமைத்து தீர்ப்பை பெற்று உச்சநீதிமன்றம் விசாரித்து அது இறுதித் தீர்ப்பை சரி செய்து, காவிரி ஒழுங்காற்று குழு- காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தும் காவிரி நதிநீர் பிரச்சனை ஓயவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையத்துக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இருந்தும் அதன் உத்தரவுகளை மீறுகிற கர்நாடகா அரசை மத்திய பாஜக அரசு கண்டிப்பதும் இல்லை. இதனால் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல தமிழ்நாடு -கர்நாடகா இடையே தென் பெண்ணையாறு பிரச்சனையும் ஓயாத ஒன்றாக இருக்கிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் கர்நாடகா அரசு அணை கட்டும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தமிழ்நாட்டின் கோரிக்கையான தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமலேயே இழுத்தடித்து வருகிறது. உச்சநீதிமன்றமும் தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க கண்டனங்களுடனும் கண்டிப்புடனும் அவகாசம் கொடுத்து ஓய்ந்துவிட்டது. இதனால் கடந்த முறை விசாரணையின் போது, இனி மத்திய அரசு அவகாசமே கேட்கக் கூடாது என வழக்கை ஒத்திவைத்திருந்தது.
தற்போது தமிழ்நாடு- கர்நாடகா இடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண இருக்கிறோம்; ஆகையால் மேலும் 12 வார கால அவகாசம் கேட்கிறது மத்திய பாஜக அரசு. இது தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை அமைக்காமல் தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்கிற அப்பட்டமான துரோகம் என்பதால் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென் பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு இனியும் அவகாசமே தரக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. தென்பெண்ணையாறு நடுவர் மன்றத்தை இதுவரை மத்திய பாஜக அரசு அமைக்காதது அதன் தோல்வியையே வெளிப்படுத்துகிறது எனவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. எத்தனை எத்தனை வஞ்சகம்!












Click it and Unblock the Notifications