பல மாநில காவல்துறை சப்போர்ட்.. போராடும் டெல்லி போலீசாருக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு
Recommended Video
டெல்லி: வக்கீல்களை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் டெல்லி போலீசாருக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களில் காவல்துறையினர் மீது வக்கீல்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து இன்று காலை முதல் டெல்லியில் திடீர் என நூற்றுக்கணக்கான போலீசார் சீருடையை தவிர்த்துவிட்டு பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, இதுபோல போலீசார் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையினரின் போராட்டத்திற்கு ஐபிஎஸ் அதிகாரிகளும் கூட வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் டெல்லி போலீசாருக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேபோல ஹரியானா, பீகார் மாநில காவல் துறையினரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு தங்கள் ஆதரவு கரத்தை நீட்டி உள்ளனர்.
எனவே டெல்லி மட்டத்திலான இந்த சம்பவம் தற்போது தேசிய அளவில் பரபரப்பை அதிகரித்துள்ளது.
இன்னும் பல மாநில காவல் துறையினரும் வெளிப்படையாக தங்கள் ஆதரவை டெல்லி போலீசாருக்கு வழங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார் என்பது தொடர்பாக அரசியல் மட்டத்தில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர் மற்றும் வக்கீல்கள் நடுவேயான மோதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு காவல் துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நடவடிக்கை மூலமாக காவல்துறையினரின் கோபத்தை கட்டுப்படுத்தலாம் என்பது உள்துறை அமைச்சகத்தின் திட்டமாக இருப்பதாக சில ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications