ஜனாதிபதியின் 14 கேள்விகளையும் திரும்ப அனுப்ப வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
டெல்லி: ஆளுநர், குடியரசுத் தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் காலக்கெடுவை நிர்ணயம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் 14 கேள்விகளைக் கொண்ட ஒரு விளக்கக் குறிப்பைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இதில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பிற்குப் பதிலளிக்காமல் திரும்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரித்த சுப்ரீம் கோர்ட், நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் விவகாரத்தில் தமிழக அரசுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.

14 கேள்விகள்
மேலும், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடுவை நிர்ணயித்தும் தீர்ப்பளித்தது. இது மிக மிக முக்கியமான தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை அப்போது துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் இது தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் குறித்து இடம்பெற்றுள்ள அரசியல் சாசன பிரிவின் 200 மற்றும் 201ஆவது பிரிவுகள் சுட்டிக்காட்டி திரௌபதி முர்மு கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அதை விசாரித்து. அன்றைய தினம் விசாரணையில் இந்த வழக்கில் அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
தமிழக அரசு பதில் மனு
இந்த வழக்கு நாளை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக அரசு இந்த விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தொடர்பாகக் குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு எதிராகத் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் குடியரசுத் தலைவர் விளக்கக் குறிப்புக்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவரின் விளக்கக் குறிப்பு ஏற்கனவே உள்ள சட்டத்தைச் சீர்குலைப்பதாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதற்காகச் செய்யப்பட்ட மேல்முறையீடு போலவே தெரிவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் விளக்கக் குறிப்பைப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பத் தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியிருக்கிறது.
நாளை விசாரணை
முன்னதாக இன்று மாலை தான் கேரள அரசு இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. கேரள அரசும் குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் கொண்ட விளக்கக் குறிப்புக்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கூறியிருந்தது. இந்தச் சூழலில் தான் தமிழ்நாடு அரசும் அதையே வலியுறுத்தி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், இதில் முக்கியமான வாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications