அதிமுக ஷாக்: ரூ4,800 கோடி டெண்டர் கேஸ்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!
டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறையில் ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதிமுகவின் 2016-2021 ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலை துறை இலாகாவை தன் வசம் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி மீது ரூ4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை 2018-ல் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணிகளை உறவினர்களுக்கு மட்டுமே கொடுத்தது, வண்டலூர் - வாலாஜா சாலை 6 வழிச் சாலையாக மாற்றப்பட்டதில் முறைகேடு உள்ளிட்டவை அந்த வழக்கில் புகார்களாகத் தெரிவிக்கப்பட்டிருந்தன.

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தி இருந்தார். இவ்வழக்கில் 2018-ல் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு, உச்சநீதிமன்றம் போனது. ஆனால் வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே வந்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் டிஸ்மிஸ் செய்தார்.
தற்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு போயிருக்கிறது தமிழ்நாடு அரசு. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ4,800 கோடி டெண்டர் வழக்கில் ஆர்.எஸ். பாரதி மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications