மேகதாது அணையை அனுமதிக்க முடியாது! கர்நாடகா உரிய நீரை வழங்காமல் ஏமாற்றுகிறது! தமிழக அரசு திட்டவட்டம்
டெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிப்பது தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முக்கிய மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நதி நீரை முறையான அளவுக்குத் தராமல் கர்நாடக தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது.
இதனால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தன. காவிரி நதி நீரைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

மேகதாது
அதில் காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சனை தொடர்பாகக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிதாக அணைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக கர்நாடக அரசு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதனிடையே மேகதாது அணை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க வேண்டும் எனக் கர்நாடக அரசு கடிதம் ஒன்றைக் கொடுத்து இருந்தது.

கடும் எதிர்ப்பு
அந்தக் கடிதத்தை ஏற்றுக் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்குத் தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

நேரில் சந்திப்பு
இது தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருந்தார். அப்போது, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கப்படாது என அமைச்சர் உறுதி அளித்தார். அதேநேரம் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பது குறித்து அவர் எவ்வித உறுதியும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்கு
இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதற்குக் கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அம்மாநில அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அனுமதிக்க முடியாது
இந்நிலையில், இதற்குத் தமிழக அரசு பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் காவிரியில் இருந்து உரிய நீரை வழங்காமல் கர்நாடக அரசு ஏமாற்றி உள்ளது என்றும் கடுமையான கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.

முரணானது
மேகதாது விவகாரத்தில் ஆணையம் தலையிடுவது சட்டத்திற்கும் நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணானது என்று தெரிவித்து உள்ள தமிழக அரசு, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய போது, மேகதாது அணை தொடர்பாகக் காவிரி ஆணையத்திற்கு உரிமை எதுவும் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளது. எனவே, காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது என்ற கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications