நான் ஆணையிட்டால்.. சாட்டையுடன் நாடாளுமன்றத்தைக் கலக்கிய எம்ஜிஆர்.. புரியாதவங்க இதை படிங்க!
டெல்லி:நாடாளுமன்றத்துக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இன்று வந்தார்.. என்னது? எம்ஜிஆர் நாடாளுமன்றத்துக்கு வந்தாரா என கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் அதே ஆச்சரியத்தை அளித்துள்ளார் தெலுங்கு தேசம் எம்ஜிஆர்... சாரி.. சாரி.. தெலுங்கு தேசம் எம்பி நரமல்லி சிவபிரசாத்.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் 29வது மாநிலமாக கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் அறிவிப்பு வெளியானது.
அதன் பின்னர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று சந்திரசேகர் ராவ் முதல் தடவையாகவும், தற்போது 2வது தடவையாகவும் முதல்வராக அரியணை ஏறியுள்ளார். அதே நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த சந்திரபாபு தெலுங்கானா பிரிவை தொடர்ந்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி மத்திய அரசை வற்புறுத்தி வந்தார்.
சிறப்பு அந்தஸ்து கோரிக்கை
ஒரு கட்டத்தில் அந்த கோரிக்கையை முன் வைத்து பாஜகவுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டார். இருப்பினும் சிறப்பு அந்தஸ்து என்ற கோரிக்கையை கைவிடாமல் தொடர்ந்து அவரும், அவரது கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
போராடும் எம்பி சிவபிரசாத்
அந்த குரலுடன் வலம் வருபவர் தான் தெலுங்கு தேசம் எம்எல்ஏ நரமல்லி சிவ பிரசாத். அதற்காக அவர் நடத்தும் வித்தியாசங்கள் அத்தனை அற்புதம்.. ஏக நகைச்சுவை.. பலமுறை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை முன்வைத்து எம்.பி சிவபிரசாத் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடமணிந்து நாடாளுமன்றத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
முழக்கமிட்ட எம்பிக்கள்
இந் நிலையில் நாடாளுமன்றத்தில் வழக்கமான அலுவல் பணிகள் துவங்கின. அப்போது அந்த வளாகத்தில் திரண்ட தெலுங்கு தேச எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சிறப்பு அந்தஸ்து கோரி அவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தான் போராட்டத்தின் ஹைலைட். அவர் தான் ஆந்திர எம்பி சிவபிரசாத்.
எம்பியாக வந்த எம்ஜிஆர்
வழக்கம்போல் வெள்ளை நிற வேட்டி,சட்டை, எம்ஜிஆர் அணிவது போன்ற தொப்பி, சட்டையின் மேலே வாட்ச் அணிந்திருப்பது என வந்தவர் இன்றே சற்றே வித்தியாசமாக காட்சியளித்தார். கையில் நான் ஆணையிட்டால் என்ற எம்ஜிஆர் பாடலில் காணப்படுவதை போன்ற சாட்டையுடன் களமிறங்கினார். சவுக்குடன் "நான் ஆணையிட்டால்" பாடலை இசைத்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பல வேஷங்கள் போட்டவர்
இதற்கு முன்னர் அவரது மகாத்மா காந்தி, கிறிஸ்துமஸ் தாத்தா போன்றும் வேடமணிந்து வந்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை பார்ப்பவர்களுக்கு வேறுவிதமாக தெரிந்தாலும் சொந்த மாநில நலனுக்காக போராடுகிறார் என்று பாராட்டவும் செய்தனர்.