சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு- குஜராத் அரசு 2 நாளில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த உலகை உலுக்கிய மதவன்முறைகளில் அப்போதைய மாநில முதல்வரும் தற்போதைய பிரதமருமான மோடியை தொடர்புபடுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் (டீஸ்டா செதல்வாத், தீஸ்தா செதல்வாட்) ஜாமீன் மனு மீது குஜராத் மாநில அரசு 2 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது. இந்த மதவன்முறையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கியது குஜராத் மத வன்முறைகள்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகளின் போது காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி உட்பட 64 பேர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.
சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை கடந்த ஜூன் 24-ந் தேதி உறுதி செய்தது.
குஜராத்தில் அடுத்தடுத்து கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் அரசியல் வியூகம் என்ன?
அதேநேரத்தில் 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட்டை அதிரடியாக கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு. டீஸ்டாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து டீஸ்டா செதல்வாட், ஶ்ரீகுமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று டீஸ்டா, ஶ்ரீகுமார் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் குஜாரத் அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, குஜராத் அரசின் பதில் மனு தயாராக உள்ளது; ஆனால் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது உள்ளது. ஆகையால் கால அவகாசம் தேவை என கோரினார். அப்போது நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்தர பட், சுதான்ஷு துலியா ஆகியோர், மனுதாரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றே உங்கள் பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இனைத் தொடர்ந்து நாளை மறுநாள் சனிக்கிழமைக்குள் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்படும் என்றார் துஷார் மேத்தா. இதனைத் தொடர்ந்து 2 நாட்களில் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.