காங்கிரஸ் ஜோதியில் கரையும் ஜெகன் சகோதரி கட்சி! டெல்லியில் சோனியா, ராகுலுடன் திடீர் சந்திப்பு!
டெல்லி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும் ஒய்.எஸ.ஆர்.டி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். தெலுங்கானா தேர்தல் நடைபெறும் நிலையில் ஒய்.எஸ.ஆர்.டி.பி கட்சியை காங்கிரஸில் இணைப்பது தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கானா தேர்தல் களத்தில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ஆளும் பிஆர்எஸ் எதிர்க்க ஆளே இல்லை என்கிற கெத்தில் களத்தில் நிற்கிறது.

தெலுங்கானா காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை பிடிப்பதைவிட பாஜகவை விட கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என முனைப்புதான் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒய்.எஸ.ஆர்.டி.பி எனும் அரசியல் கட்சி நடத்தி வரும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, அண்மைக்காலமாக காங்கிரஸுடன் நெருக்கமான உறவில் இருந்து வருகிறார்.
இதனால் காங்கிரஸ் கட்சியில் ஒய்.எஸ.ஆர்.டி.பியை ஒய்.எஸ்.ஷர்மிளா இணைத்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில் தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா கூட்டணி அமைப்பார் எனவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியில் இன்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை ஒய்.எஸ்.ஷர்மிளா சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியுடம் உடனிருந்தார். இச்சந்திப்பில் தெலுங்கானா அரசியல் களம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இச்சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானா முதல்வர் கேசிஆரின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்றார். இருந்த போதும் சோனியா- ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பின் முடிவுகள் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications