வட மாநிலங்களில் கொதிக்கும் வெப்பம்.. தேர்தல் பணியாளர்கள் 10 பேர் உள்பட 14 பேர் உயிரிழப்பு
லக்னோ: வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. நேற்று பீகாரில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பணியாற்றிய 10 அலுவலர்கள் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதுதவிர பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு இடங்களிலும் தாங்க முடியாத வெப்பம் உள்ளது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

வெயிலின் உக்கிரம் டெல்லியை போல பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. பஞ்சாப்பின் பட்டியாலாவில் நேற்று 114,8 டிகிரியும், அமிர்தசரசில் 113. 36 டிகிரியும், சண்டிகாரில் 114. 44 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவானது.
பீகாரில் கொளுத்தும் வெயிலில் தேர்தல் பணியாற்றிய 10 அலுவலர்கள் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு நேற்று இறந்துள்ளனர். இதுதவிர பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். இது தொடர்பாக பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'போஜ்பூரில் 5 தேர்தல் அதிகாரிகள் வெப்ப தாக்கு ஏற்பட்டு பலியாகி உள்ளனர்.
ரோக்தஸ்சில் 3 பேரும், கைபூர், அவுரங்காபாத்தில் தலா ஒரு அதிகாரியும் வெயிலுக்கு பலியாகி உள்ளனர். பலியானவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அரசு முடுக்கிவிட்டுள்ளது. பீகாரில் பல இடங்களில் 111.2 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது. நேற்று முன்தினம் புக்கார் பகுதியில் 116.7 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது.
அனல் காற்று வீசுவதால் பீகாரில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு வருகிற 8 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் உத்தர பிரதேசத்திலும் வெப்ப அலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெயில் காரணமாக மிர்சோபூரில் 15 தேர்தல் பணியாளர்கள் பலியானார்கள். உத்தரபிரதேசம், பீகாரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 25 தேர்தல் அலுவலர்கள் நேற்று பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications