மினிமம் பேலன்ஸ் இல்லை.. வங்கிகள் வசூலித்த அபராதம் ரூ.1996 கோடி.. மத்திய அரசு தகவல்
டெல்லி: குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபாரதம் மூலம் ரூ.1996 கோடியை மக்களிடம் வங்கிகள் வசூலித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரூ. 1000, ரூ. 500, ரூ.3000. ரூ.5000 என ரூபாய் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பரமாரிக்க வேண்டும் என்று வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு (வங்கிகளை பொறுத்து) வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன.
அப்படி குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை வங்கிகள் அனைத்துமே மேற்கொண்டு வருகின்றன.
அபராதம் விதிப்பு
பாரத ஸ்டேட் வங்கிதான் குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காவிட்டால் அபராதம் என்ற நடமுறையை என்று கடந்த 2012-ம் ஆண்டு வரை பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் பாரத ஸ்டேட் வங்கி தொடங்கியது. ஆனால் மக்கள் அபராத தொகை அதிகமாக இருப்பதாக குற்றம்சாட்டியதால் அபராதத்தை சற்று குறைத்தது.
ரூ.790.22 கோடி அபராதம்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காதவர்களுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.790.22 கோடி அபராதத்தை வங்கிகள் வசூலித்துள்ளன.
மத்திய அரசு
பின்னர் 2017-18-ம் ஆண்டில் அதிக அளவாக ரூ.3,368.42 கோடியை வங்கிகள் வசூலித்து உள்ளன. இதேபோல் 2018-19-ம் ஆண்டில், 18 பொதுத்துறை வங்கிகள் ரூ.1996.46 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன என்று தெரிவித்தார்.
அனுராக் சிங் தாகூர்
குறைந்த பட்ச இருப்பு பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையானது ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கு இல்லை என்றும் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் நாடாளுமன்றத்தில விளக்கம் அளித்தார்.