அவசரமாக விரையும் மத்திய குழு.. சனி, ஞாயிறு லாக்டவுன் நீட்டிப்பு.. கேரளாவில் என்னதான் நடக்கிறது?
டெல்லி: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 6 கொண்ட நோய் தடுப்பு குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்புகிறது. 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது.
25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்
கடந்த சில நாட்களாக தினமும் 22,000 பாதிப்புகள் ஏற்பட்டு அதிர்ச்சியை கொடுக்கின்றன. மற்ற மாநிலங்கள் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், கேரளாவோ கூடுதலாக என்னென்ன கட்டுப்பாடுகளை விதிக்கலாம்? என யோசனை செய்து வருகிறது.
கொரோனா பிடியில் கேரளா
நேற்று மட்டும் கேரளாவில் 22,056 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. அங்கு மொத்த பாதிப்பு மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 33,27,301 என்று உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 131 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 16,457 ஆக இருக்கிறது. அதாவது தற்போது நாட்டில் ஏற்படும் மொத்த பாதிப்பில் சுமார் 50 சதவீத பாதிப்புகள் கேரளாவில் மட்டுமே எற்பட்டு வருகின்றன.
சிதைந்த கேரள மாடல்
கொரோனா முதல் அலையில் சிறப்பாக நவடிக்கை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக பல்வேறு பாராட்டுகளை பெற்றது கேரளா. 'கேரள மாடல்' என்று ஐ.நா.வும் பாராட்டியது. நெட்டிசன்களும் பாராட்டு புகழ் மழை பொழிந்தது. ஆனால் தற்போது அந்த கேரளா மாடல் என்ற ஒன்றையே அடித்து சென்று விட்டது கொரோனா வைரஸ்.
பாஸிடிவ் ரேட் மிக அதிகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) ஒரு ஆய்வின்படி ஜூன் 14 முதல் ஜூலை 6 வரை கேரளாவில் 44.4 சதவிகிதம் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிடிவ் ரேட்) தொடர்ந்து 13 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
கட்டுப்பாடுகள் எப்படி?
கேரளாவில்கொரோனா பாசிட்டிவ் விகிதத்தை(டிபி ஆர்) வைத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது 5% க்குக் கீழே உள்ள டி.பி.ஆர் உள்ள பகுதிகள் ஏ எனவும், 5 முதல் 10% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் பி எனவும், 10 முதல் 15% வரை டி.பி.ஆர் உள்ள பகுதிகள் சி எனவும், 15% மேல் டிபிஆர் கொண்ட பகுதிகள் டி எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சனி, ஞாயிறு லாக்டவுன்
தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் வருகிற வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நீடிக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
விரையும் மத்திய குழு
இந்த நிலையில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு கேரளாவுக்கு அனுப்புகிறது. இந்த குழு கேரளாவில் நோய் தாக்கத்திற்கான காரணம், தடுப்பதற்கான வழிகள் குறித்து மாநில அரசுடன் ஆலோசனை மேற்கொள்ளும். ''கேரளாவில் இன்னும் ஏராளமான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவதால், தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இந்த குழு உதவும்" என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டவியா கூறினார்.