இந்தியாவின் மகள்கள் தோற்றனர்.. பிரிஜ் பூஷன் வென்றார்.. ராமர் காட்டிய பாதை இதுவா? கொதித்த சாக்ஷி!
டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஷ் பூஷன் மகனுக்கு பாஜக லோக்சபா சீட் கொடுத்துள்ளது குறித்து வேதனை தெரிவித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் மே 20ஆம் தேதி நடக்கிறது. மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உ.பி மாநிலம் கைசர்கஞ்ச் லோக்சபா தொகுதியும் ஒன்று. இங்கு பாஜக சார்பில் போட்டியிடுவது யார் என்ற பெரும் கேள்வி எழுந்திருந்தது. காரணம், பிரிஜ் பூஷன் சிங்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், 2016 - 2019 வரையிலான காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனினும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் வலுவடைந்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது.
போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும் சீட் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை. பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரது மகனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது பாஜக.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங்குக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக கொந்தளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்.
சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் மகள்கள் தோற்றனர், பிரிஜ் பூஷன் வென்றார். நாங்கள் அனைவரும் எங்கள் உயிரைப் பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை, நீதியை மட்டுமே கோருகிறோம்.
கைது செய்வதை விடுங்கள், இன்று அவரது மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள். ஒரு மனிதனுக்கு முன்னால் இவ்வளவு பலவீனமாக உள்ளதா நம் நாட்டு அரசு? ஸ்ரீராமரின் பெயரில் வாக்குகள் மட்டுமே தேவை, அவர் காட்டிய பாதை என்னானது?" என்ன கொதித்துப் போய் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications