கோவிஷீல்டு வாக்சினுக்கு இனி ரொம்ப நாள் வெய்ட்டிங் தேவையில்லை.. 2 டோஸுக்கான கால இடைவெளி குறைப்பு
டெல்லி : கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்குமான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல் டோஸ் எடுத்த எட்டு முதல் 16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் மீண்டும் ஆட்டத்தை துவக்கிய நிலையில் தற்போது சற்றே அடங்கியுள்ளது.
இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம்
கொரோனா தடுப்பூசி
மருத்துவ கட்டமைப்புகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை உலக நாடுகள் செலவு செய்து தங்கள் மக்களுக்காக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் தற்போது தடுப்பூசி வழங்குவதற்காகவும் ஒரு கணிசமான தொகையை செலவு செய்து வருகின்றன உலக நாடுகள். தடுப்பூசி தான் மக்களை காக்கும் பேராயுதம் என உலக சுகாதார அமைப்பும், உலக நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கடும் கட்டுப்பாடுகள்
இந்தியாவில் இதுவரை1,79,44,59,673 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தடுப்பூசி குறித்த அச்சம் காரணமாக சிலர் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். இதையடுத்து தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்குத்தான் பொது இடங்களில் அனுமதி, பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளிட்ட பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
2வது டோஸ் தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் 'கோவிஷீல்ட்' தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் அடிப்படையில், 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.
கால இடைவெளி குறைப்பு
இந்த நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி 8 முதல் 12 வாரங்களாக குறைக்கப்படுவதாக நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்தும் கால இடைவெளி மாற்றம் செய்யப்படவில்லை. சமீபத்திய உலகளாவிய அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.