கூவம் நதியை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்? உச்சநீதிமன்றம் விளக்கம்
டெல்லி: கூவம் நதியை பராமரிக்க தவறிய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் எச்சரிக்கைவிடுத்தது.
மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம், நீரி அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் என்று ஒரு குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம!
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் இறுதி விசாரணை நடந்தபோது, தமிழக அரசு மனுவை, ஹைகோர்ட், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமை அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பசுமைத்தீர்ப்பாயம் எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளது என்றும், அபராதம் விதித்து உத்தரவிடப்படவில்லை என்றும் கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.