Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்..குண்டர் தடுப்புச் சட்ட வழக்கில் திருப்பம்..உச்ச நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Savukku Shankar Supreme Court goondas act

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசிடம் இடைக்கால நிவாரணம் பெற விண்ணப்பிக்குமாறு சவுக்கு சங்கர் தாய்க்கு உத்தரவிட்டது. ஆனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் ஏ.கமலா சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரிக்க வேண்டும். தனது மகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஏ.அமானுல்லா அடங்கிய அமர்வு கடந்த ஜூலை 15-ம் தேதி விசாரித்தது. அப்போது சவுக்கு சங்கரால் தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?, குண்டர் சட்டத்தில் அடைத்தது ஏன்?, பொது அமைதி எங்கு வருகிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. வழக்கையும் ஜூலை 18ம் தேதிக்கு (இன்றைக்கு) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை உறுதி செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், சென்னை போலீஸ் கமிஷனர் சவுக்கு சங்கருக்கு எதிராக கடந்த மே 12-ம் தேதி பிறப்பித்த தடுப்புக்காவல் ஆணையை இதன் மூலம் உறுதிப்படுத்தி, அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாளிலிருந்து 12 மாத கால அளவிற்கு தடுப்புக்காவலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை தமிழக அரசு கடந்த 16-ம் தேதியே உறுதி செய்திருந்தது. இந்த உத்தரவின் ஆங்கில மொழியாக்க நகல் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.

அப்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சவுக்கு சங்கர் அரசுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான விவரங்களும் தமிழ்நாடு அரசு சார்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்தது அதை தவறாக பயன்படுத்தியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டவர் சவுக்கு சங்கர் இவர் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

மேலும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்து வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இது சாதாரண சிவில் வழக்கு கிடையாது இது சட்டவிரோத தடுப்பு காவல் சட்டம் தொடர்பான வழக்கு, இந்த வழக்கில் இரண்டு மாதங்களுக்கு மேலாக சவுக்கு சங்கர் ஏன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையே வழக்கில் சவுக்கு சங்கரின் உரிமை சார்ந்த விவகாரம் , உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது . தமிழக அமைச்சரவையில் இருந்த ஒருவர் குறித்து பேசியதாக சவுக்கு சங்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தற்பொழுது அந்த அமைச்சர் பதவி இழந்து தற்போது சிறையில் இருக்கிறார் என செந்தில் பாலாஜி குறித்து சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மேலும் நீதித்துறை குறித்து எதுவும் தவறாக பேச மாட்டேன் என உறுதிமொழி அளிக்க சவுக்கு சங்கர் தயாராக இருப்பதாகவும், அவரது தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது உச்ச நீதிமன்றம், நாங்கள் ஏன் அவ்வாறு உறுதிமொழி தரச் சொல்லப் போகிறோம் எங்களை பொறுத்தவரை உறுதிப்படுத்தப்படாத எந்த தகவலையும் பேசக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியமானது என நீதிபதிகள் பதில் அளித்தனர்

மேலும் சவுக்கு சங்கர் வழக்கை திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், அது நடக்காதபட்சத்தில் இடைக்கால உத்தரவை கோரி சவுக்கு சங்கர் தரப்பு தங்களை நாடலாம் என்றும் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுபற்றி முடிவெடுத்து பகல் 2 மணிக்கு தெரிவிக்க அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில் வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தாயார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கருக்கு இடைக்கால் பிணை கேட்டார்.இந்த கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவிட்டனர்.

அதேநேரம் இடைக்காலப் பிணை என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே என்று தெளிவுப்படுத்திய நீதிபதிகள், வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப் பிணை பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+