இன்னும் 6 மாசம் அவகாசம் கொடுங்க.. சிஏஏ சட்ட விதிகளை இறுதி செய்ய உள்துறை அமைச்சகம் கோரிக்கை
டெல்லி: தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கான சட்ட விதிகளை இறுதி செய்ய மேலும் 6 மாத காலம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி கோரியுள்ளது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டமானது (சிஏஏ) மசோதாவாக கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு அடுத்த நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனையடுத்து 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இதற்கான சட்ட விதிகள் தற்போது வரை இறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு சட்டவிதிகள் இறுதி செய்யப்படாததால் இந்த சட்டம் செயலற்று கிடக்கிறது. பொதுவாக ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அதற்கான விதிகள் சட்டம் இயற்றப்பட்ட தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் இறுதி செய்யப்பட வேண்டும். அப்படி செய்யப்படவில்லையெனில் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது. எனவே இந்த விதிகளை இறுதி செய்ய உரிய காரணங்களை கூறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள சட்டக் குழுவிடம் கால அவகாசம் பெற்றுக்கொள்ளலாம்.
2 முறை ஒத்திவைக்கப்பட்டு தொடங்கியது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி! சீறி பாயும் காளைகள்
6வது முறை
இப்படியாகதான் மத்திய உள்துறை அமைச்சகம் சிஏஏ-வுக்கான சட்ட விதிகளை இறுதி செய்ய தொடர்ந்து கால அவகாசத்தை கோரி வருகிறது. இதுவரை இப்படி 5 முறை மத்திய அரசு அவகாசம் கேட்டிருக்கிறது. கடைசியாக கடந்த 6 மாதத்திற்கு முன்னர் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என மக்களவையின் சட்டக்குழுவிடம் உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்திருந்தது. இது சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் மீண்டும் 6 மாத கால அவகாசத்தை கோரியிருந்தது. இதனையடுத்து மாநிலங்களவையின் சட்ட துணைக்குழுவிடமும் இதே கோரிக்கையை மத்திய அரசு வைத்திருக்கிறது.
சட்ட விதிகள்
மாநிலங்களவையின் சட்ட துணைக்குழுவை பொறுத்த அளவில் மத்திய அரசு கேட்டிருந்த காலக்கெடு நாளையுடன் (ஜன.09) முடிவடைகிறது. எனவே இந்த காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறது. இதற்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை அமல்படுத்தப்படாத நிலையில் இது குறித்து கடந்த நவம்பர் மாதம் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சிஏஏ அமல்படுத்தப்படாது என்று பலர் கனவு காண்கிறார்கள். அவர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள். இந்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்" என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அகதிகள்
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் கடந்த 2014ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் ஜெயின் போன்ற மதத்தினை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இதில் இலங்கை தமிழர்கள் குறித்தோ அல்லது இஸ்லாமியர்கள் குறித்தோ எவ்விதமான உறுதி மொழியும் கொடுக்கப்படவில்லை. இதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து 2009ம் ஆண்டிலிருந்தே ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக புலம் பெயர்ந்து வந்திருக்கின்றனர்.
போராட்டம்
இவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த சிஏஏ சட்டத்தில் இது குறித்து எதுவும் பேசப்படாமல் இருப்பது தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேபோல, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகள் குறித்தும் இந்த சட்டம் எதுவும் பேசவில்லை. எனவே இது பாரபட்சமான சட்டம் என்றும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக பாவிக்கும் சட்டம் என்றும் அம்மதத்தை சேர்ந்த மக்கள் கொதித்தெழுந்தனர்.
காலக்கெடு
இதனால் நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 83 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்துதான் இச்சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் சட்டத்தின் விதிகளை இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 6 மாதக்காலம் கூடுதல் காலக்கெடு கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.