XBB.1.16 வகை வைரஸ்.. வேகவேகமாக பரவிவரும் கொரோனா தொற்று.. நிலைமையை கவனிக்கும் 'ஹூ'.. காரணம் இதுதான்
டெல்லி: இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பை உலக சுகாதார மையம் உற்று கவனித்து வருவதாக கூறியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று வைரஸ் அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான உயிரிழப்புகள், பில்லியன் கணக்கில் பொருளாதார பாதிப்புகள் என உலகத்தின் ஒட்டுமொத்த மனித செயல்பாடுகளும் ஒரு முறை ஸ்டக்காகி தடுப்பூசி வந்த பிறகு மீண்டும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இந்த பாதிப்புகளிலிருந்து தற்போது வரை உலகம் முழுமையாக மீளவில்லை.
இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் ஒரு கொரோனா பரவல் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்கள்தான் இந்த அச்சுறுத்தலுக்கு காரணமாகும். அதாவது கொரோனா தொற்றிலிருந்து ஒமிக்ரான் உருமாறி பரவியதை போல, ஒமிக்கிரான் கொரோனா வைரஸிலிருந்து XBB வகை கொரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடைந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவி வந்தது.

XBB.1.16 வைரஸ்கள்
இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட நாடுகளில் XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியபோது இந்தியாவில் நாளொன்றுக்கு 200க்கும் குறைவாகவே கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியிருந்தது. ஆனால் நாடு முழுவதும் தொற்று திடீரென அதிகரிக்க தொடங்கி தற்போது 3,000க்கும் அதிகமானோரை வைரஸ் பாதித்திருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

உலக சுகாதார மையம்
அதாவது கொரோனா வைரஸை உற்று பார்த்தால் அதில் ஆன்டெனா மாதிரி சில கொம்புகள் இருக்கும். இது ஸ்பைக் புரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பைக் புரதத்தில் மாற்றம் ஏற்படுவதால் கொரோனா வைரஸ் புதியதாக பரினாமம் அடைகிறது. அப்படி உருவானதுதான் இந்த XBB.1.16 வகை கொரேனா வைரஸ். இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதால்தான் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார மையத்தின் சுகாதார அவசரநிலை திட்ட விஞ்ஞானி மரியா டிஜோசப் வான் கெர்கோவ் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஏற்கெனவே கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்ட லாக்டவுன் சாமானிய மக்களை கடுமையாக பாதித்தது. இப்படி இருக்கையில் மீண்டும் இந்த XBB.1.16 வகை கொரேனா வைரஸால் மற்றொரு லாக்டவுன் ஏற்படுமோ என்கிற அச்சம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறுகையில் "இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆனால் முதல் ரவுண்டு கொரோனா வைரஸ் போல தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. எனவே மற்றொரு கொரோனா அலை வந்தாலும் அச்சப்பட தேவையில்லை" என்று கூறியுள்ளனர். ஆனாலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு
போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி, கோவிட் அறைகள் போன்றவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. ஆலோசனையில் மேற்குறிப்பிட்ட வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications