லோக்சபாவில் அத்துமீறல்.. கையில் வைத்திருந்த கண்ணீர் புகை குண்டு.. தாவி குவித்த மர்ம நபர்கள் கைது
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 நபர்களால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற தாக்குதல் நடைபெற்ற தினத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பி.கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து வழக்கம்போல குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது மக்களவையில், பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ஒரு இளைஞர் மற்றும் ஒரு இளம் பெண் திடீரென அவைக்குள் குதித்துள்ளனர். அவர்கள் கையில் மஞ்சள் நிறத்தில் புகையை உமிழக்கூடிய பொருளை வைத்திருந்துள்ளனர். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அவையில் இல்லை என்று தெரியவருகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் சமீபத்தில்தான் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் சிறப்பம்சமே பாதுகாப்புதான் என்று சொல்லப்பட்டது. இப்படி இருக்கையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதன் முறையாக இப்படியொரு பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறியுள்ளனர்.
#WATCH | An unidentified man jumps from the visitor's gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
"அவையில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. திடீரென பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். ஒருவர் உறுப்பினர்கள் இருக்கையின் மீது குதித்தார். இன்னொருவர் சபாநாயகர் நோக்கி ஓடினார். இருவர் கைகளிலும் வண்ணப் புகை உமிழும் பொருள் இருந்தது. அது விஷப் புகையாக இருக்கலாம், கண்ணீர் புகையாக இருக்கலாம், ஏன் புகை வெடிகுண்டாகவும் இருக்கலாம். நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு மீறல் நடந்துள்ளது" என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.

பொதுவாக பார்வையாளர்களுக்கு செல்போன் கூட அவைக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இப்படி இருக்கையில் வண்ண நிற புகை உமிழக்கூடிய பொருள் எப்படி மக்களவைக்குள் கொண்டு செல்லப்பட்டது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு 4 கட்ட சோதனை இருக்கிறது. மெட்டல் டிடக்டர், ஸ்கேனர் சோதனை செய்யப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் பார்வையாளர்கள் மாடத்திற்கு அனுப்பப்படுவார்கள். மாடத்தில் பாதுகாப்புக்கு காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள். அவை முடிந்தவுடன் பார்வையாளர்களை அவர்கள் அங்கிருந்து வெளியேற்றுவார்கள்.
இவ்வளவு கட்டுப்பாடுகளை மீறி இருவர் அவைக்குள் குதித்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் டெல்லி போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications