நாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திய மக்களையும் சேர்த்தே அவமதிக்கிறார்கள்: மோடி பாய்ச்சல்
டெல்லி: நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவதன் மூலம் நாடாளுமன்றத்தை மட்டுமல்ல இந்திய மக்களையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கி வருகின்றன. இதுவரை மக்களவை, மாநிலங்களவை ஒருநாள் கூட முழுமையாக நடக்கவில்லை.

பெகாசஸால் உண்டான அமளி
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் நேரத்தில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரிதானது. நாடுமுழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் தகவல் ஒட்டு கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பெகாசஸ் விவகாரத்தில் அரசின் மவுனத்தை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நீதி விசாரணை கோரியுள்ளன.
மறுபுறம் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காததும், விவசாயிகள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வராததும் நாடாளுமன்ற அமளிக்கு காரணமாக அமைந்தது.
பெகாசஸ் விவகாரத்தில் புதிய எழுச்சிப்பெற்றுள்ள ராகுல் காந்தியும் காங்கிரஸும் இன்று நாடாளுமன்றம் தொடங்கும் முன் திமுக, இடதுசாரிகள், திரிணமுல் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சைக்கிள் பேரணி
பின்னர் ராகுல் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் சைக்கிள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். இந்த விவகாரத்தை ஒட்டி பாஜக அவசர ஆலோசனை நடத்தியது. இந்தக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி ஆவேசமாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவர் தனது கட்சி எம்.பிக்களுக்கும் சில கட்டளைகளை பிறப்பித்தார்.

பாஜக கூட்டம்
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் எம்பிக்கள் நடந்துக்கொள்ளும் விதம், அவர்களது பேச்சு குறித்து வேதனையை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தின் மதிப்பு மிகு நேரம் வீணடிக்கப்படுவதை குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.
எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: "எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்களின் செயல்பாடுகள், நடத்தையைப் பார்த்து பிரதமர் மோடி கடுமையான கோபமடைந்துள்ளார். மத்திய அமைச்சரின் கையிலிருந்த காகிதங்களைப் பறித்து கிழித்த சம்பவம், நாடாளுமன்றத்தையும், மக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமானப்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி. ஒருவர் மசோதாக்கள் நிறைவேற்றியது குறித்து அவதூறாகப் பேசியதற்கும் பிரதமர் கண்டனம் தெரிவித்தார். அனைத்து மசோதாக்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இ-ருபி திட்டம்
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், பிரதமர் மோடி பேசியது குறித்துக் கூறுகையில், "மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதிலிருந்து நாம் நழுவக் கூடாது. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இ-ருபி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு மகிழ்ச்சியில் பிரதமர்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் அவமானப்படுத்தப்படுகின்றன. ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் ரூ.1.16 லட்சம் கோடி எட்டியதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்" எனக் கூறினார்.
இந்தக்கூட்டத்தில் மேலும் பாஜக எம்.பிக்கள் அதிக அளவில் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்கவேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இத்தனை மணி நேரம் தானா நாடாளுமன்றம் நடந்தது?
முதல் 2 வாரத்தில் 107 மணி நேரம் செயல்பட வேண்டிய நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக 18 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது என்றும் இதனால் மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி அளவுக்கு வீணாகியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications