இது கருத்து சுதந்திரம் கிடையாது.. திமுக எம்பியின் பேச்சால்.. ‘டென்ஷன்’ ஆன ராஜ்யசபா தலைவர்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி அப்துல்லா, பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கரும் தனது அதிருப்தியை காட்டினார்.
ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை நேற்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரில் சட்டசபை இடங்களை அதிகரிப்பது, எஸ்சி, எஸ்டி பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்கள் இம்மசோதாவில் இடம் பெற்றிருந்தன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அதே நாளில் இந்த மசோதாவை ராஜ்யசபாவில் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தில் ராஜ்யசபா எம்.பிக்கள் பேசினர். அப்போது, திமுக எம்பி எம்.எம். அப்துல்லா, நமது முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்க வேண்டும். வல்லபாய் பட்டேலுக்கு பிரம்மாண்ட சிலை வைப்பதை விட அவரது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் மிக முக்கியமானது என 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிரான குரலை பதிவு செய்தார்.
அப்போது தந்தை பெரியாரின் மேற்கோளை அப்துல்லா சுட்டிக்காட்டியது சபை குறிப்பில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுக எம்.பி அப்துல்லாவின் பேச்சுக்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ராஜ்யபா தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த அவை இதற்கு உடன்பட முடியுமா? இதை அமைதியாக கவனித்துக் கொண்டு இருக்க முடியுமா? இந்த தளத்தை(அவையை) அப்துல்லா தவறாக பயன்படுத்துகிறார் என்றார்.
மேலும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திமுக எம்.பி, அவைத்தலைவர் தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டதாக வலியுறுத்தினார். உடனே குறுக்கிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியும் இந்தக் கருத்துடன் ஒத்துப் போகிறார்களா.. இதை எப்படி அவை கேட்டுக்கொண்டு இருக்கும்.
காங்கிரஸ் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்" என்றார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பியுமான கேசி வேணுகோபால், ராஜ்யசபா தலைவரிடம், பெரியார் அத்தகைய கருத்தை எந்த சூழலில் கூறினார் என்பதை சரிபார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், "நாம் இந்த அவையில் எதை வேண்டும் என்றாலும் மேற்கோள் காட்டி பேசலாமா? தேசத்துரோகம், ஒருமைப்பாடு, நமது அரசியலைமைப்புக்கு எதிராக வரைக்கும் செல்ல முடியுமா?" என்றார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறுக்கிட்டு பேசினார். இதனால், அவையில் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி எம்.பிக்களுக்கும் இடையே கடும் கூச்சல் அமளி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications