தீபாவளி வரை ஏழைகளுக்கு.. ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கப்படும்.. பிரதமர் அறிவிப்பு
டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தீபாவளி வரை ஏழைகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. தினசரி கொரோனா பாதிப்புகள் 4 லட்சத்தைக் கடந்ததிருந்தது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது
தற்போதுதான் நாட்டில் கொரோனா பரவல் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1.06 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

முன்களத்தில் இருந்து போராடுகிறோம்
பிரதமர் மோடி பேசுகையில், "உலகில் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரும் நோய்த் தொற்று உலக மக்களைத் தாக்கி வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் எண்ணற்ற சவால்களைச் சந்தித்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருகிறது. தேவையான மருந்துகளை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம்.

அன்பிற்குரியவர்களை இழந்துள்ளோம்
கொரோனாவால் நம்மில் பலர் அன்பிற்குரியவர்களை இழந்துள்ளோம். இழப்பைச் சந்தித்தவர்களுக்கும் & குடும்பங்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் நாம் பல பாடங்களை கற்று வருகிறோம். மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் நிரம்பியதை நாம் கண்டோம். கொரோனா தொற்றால் நாம் மருத்துவத் துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினோம்.

ஆக்சிஜன் தேவை
ஏப்ரல்-மே மாதங்களில் மருத்துவ ஆக்சிஜன் தேவை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஆக்சிஜன் சப்ளை வசதியைப் போர்க்கால அடிப்படையில் அதிகரித்துச் சாதித்துள்ளோம். அனைத்து கட்டமைப்பையும் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் நாம் ஆக்சிஜனை எடுத்துச் சென்றுள்ளோம். கொரோனா என்ற அரக்கனை ஒழிக்க மஸ்க், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை அதிகமாக நாம் உற்பத்தி செய்கிறோம்.

தீபாவளி வரை ரேசன் பொருள்கள் இலவசம்
குறிப்பாக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளோம். கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதே நமது கவசம். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் வரை தீபாவளி வரை ரேசன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் நாடு முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications