பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
Recommended Video
டெல்லி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.
இடைக்கால தடை
எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
அரசாணை ரத்து
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்துவது குறித்து கடந்த 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அன்றைய தினமே பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறுகிறார் என்பதால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது போல் சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
பேரிடி
மேலும் பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் பிரிவு சிறப்பதிகாரியாக நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவர் மீண்டும் பதவியேற்றுக் கொள்வது குறித்து தமிழக அரசிடம் தெரிவிக்க தேவையில்லை என்று கூறியது. இது தமிழக அரசுக்கு பேரிடியாக இருந்தது.
இன்று மனு தாக்கல்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ளது. தனக்கு கொடுக்கப்பட்ட ஓராண்டுக்குள் அனைத்து சிலைகளையும் மீட்பேன் என பொன் மாணிக்கவேல் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.