மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கவே கூடாது- தமிழக அரசு கடும் எதிர்ப்பு
டெல்லி: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பல பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் 1,000 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருகிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையின் மீது தமிழக அரசுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை; ஏற்கனவே பல்வேறு விதிமுறைகளை மீறியதால்தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தோம். எனவே எந்த வகையிலும் சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications