தடுப்பூசி வரி விலக்கு குறித்து ஆராய.. மத்திய அரசு அமைத்த குழுவில் தமிழகம், மே.வங்கத்துக்கு இடமில்லை
டெல்லி: கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆராய மத்திய நிதியமைச்சகம் அமைத்த குழுவில் தமிழகம், மே.வங்க பிரதிநிதிகள் இடம்பெறவில்லை.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில்43-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி(ஜி.எஸ்.டி) கூட்டம் நடந்து. தடுப்பூசிகள், ரெம்டெசிவர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள், கொரோனா சிகிச்சைகான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் ஒருசேர கோரிக்கை விடுத்து இருந்தன.

இந்த நிலையில் கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 8 மாநிலங்களின் பிரநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
தெலுங்கானா, கேரளா , உத்தரபிரதேசம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா மாநில பிரநிதிகள் இந்த கூட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் அமைத்த குழுவில் தமிழகம் சார்பில் எந்த பிரதிநிதியும் இடம் பெறவில்லை. இதே போல் மேற்கு வங்கத்தின் சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் குழுவில் இல்லை.
மத்திய அரசு, மேற்கு வங்கம் இடையே தொடர்ந்து தகராறு நடந்து வருகிறது. தற்போது கூட பிரதமரின் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார் என்ற சர்ச்சை தொடர்பாக மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே ஒரு போரே நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 'மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு என்று தனியாக வாக்களார்கள் இல்லை. மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் செயல்பட கூடாது' என்று கடுமையாக சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications