சசிகலா முன்கூட்டியே விடுதலை கன்ஃபார்ம்- நெருங்குது ரண களகாட்சிகள்... டெல்லியில் பரபர மூவ்
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதியாகி வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் சசிகலா தரப்பு படுதீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் மூவரும் தலா ரூ10 கோடி அபராதம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதும் தீர்ப்பு.

ஜனவரி 27-ல் விடுதலை
இதனடிப்படையில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி விடுதலையாவார் என ஆர்.டி.ஐ. மூலமான தகவலில் பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்தது. ரூ10 கோடி அபராதம் செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை சசிகலா அனுபவிக்க நேரிடும் என்றும் ஆர்.டி.ஐக்கு அளித்த பதிலில் கூறப்பட்டிருந்தது.

முன்னரே விடுதலை
ஆனால் நன்னடத்தை விதிகளைக் கணக்கில் கொண்டால் சசிகலா இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ நிச்சயம் விடுதலையாகிவிடுவார் என்கின்றனர் அவரது வழக்கறிஞர்கள். அப்படி சசிகலா விடுதலையாகிவிட்டால் அதிமுகவில் என்னதான் நடக்கும் என்கிற விவாதங்கள், காய்நகர்த்தல்கள் இப்போதே அனல்பறக்கவும் தொடங்கிவிட்டன.

தினகரன் டெல்லியில் முகாம்
இந்நிலையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகக் கூடும் என்பதை டெல்லி செய்திகள் உறுதி செய்கின்றன. டெல்லிக்கு தனிவிமானத்தில் சென்றிருக்கும் தினகரன், இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறாராம். தமது விடுதலை தொடர்பில் தினகரன் ஆர்வமே காட்டவில்லை என்கிற அதிருப்தி சசிகலாவுக்கு முன்னர் இருந்ததாம். இருந்தபோதும் அரசியல் அழுத்தங்களால்தான் தாம் அமைதியாக நேரிட்டது என தினகரன் சமாதானப்படுத்தி இருந்தாராம்.

வழக்கறிஞர்களுடன் தினகரன்
இப்போது அரசியல் ரீதியாக சில சிக்னல்கள் கிடைத்ததாலேயே டெல்லிக்கு தனி விமானம் மூலம் சென்றிருக்கிறார் தினகரன். அத்துடன் மேலிடமும் சசிகலாவின் முன்கூட்டி விடுதலைக்கு இடையூறாக இருக்காது என்ற நம்பிக்கையில் படுதீவிரமான ஆலோசனைகள் டெல்லியில் நடைபெற்று வருகிறதாம். ஆக ரணகள காட்சிகள், சமாதி சபதங்கள் என அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.!












Click it and Unblock the Notifications