ஆரம்பமே பிரச்சனை.. இந்தியாவுக்கான ட்விட்டர் குறை தீர்க்கும் அதிகாரி திடீரென பதவி விலகல்
டெல்லி: இந்தியாவில் ட்விட்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் புகார்களைத் தீர்க்க புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி தற்காலிக குறைதீர்க்கும் அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமித்து இருந்தது. இந்நிலையில் திடீரென அவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் ட்விட்டர் நிறுவனம் இந்தியாவுக்கான இடைக்கால மக்கள் குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சதுர் என்பவரை பதவியில் நியமித்தது. ஆனால் திடீரென அவர் அந்த பதவியில் இருந்து விலகியதாக ட்விட்டர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்ன காரணம் என்பது குறித்து ட்விட்டர் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) சட்டம் 2021 இன் கீழ் ட்விட்டர் நிறுவனம் இனி குறை தீர்க்கும அதிகாரி என அவரது பெயரைக் காண்பிக்காது.

சமூக ஊடக சட்டம்
மின்னணு உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்காக டிஜிட்டல் செய்தி தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான மூன்று அடுக்கு குறை தீர்க்கும் கட்டமைப்பையும் நெறிமுறைகளையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது.

3 படி நிலை அதிகாரிகள்
இதன்படி புகார்களைப் பெற, ஒப்புக் கொள்ள மற்றும் தீர்க்க நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை ஒரு மாதத்திற்குள் நியமிக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களும் குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். புகாரின் 24 மணி நேரத்திற்குள், சட்டவிரோதமான அல்லது புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்திற்கான அணுகலை அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும். மின்னணு ஊடகங்கள், அவற்றுக்கு வரும் புகார்கள் தொடர்பான குறைதீர் நடவடிக்கைக்காக மூன்று கட்ட சுய நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். முதல் நிலையில் பதிப்பாளர், இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் இந்திய அரசின் மேற்பார்வைக்குழு என அந்த வசதிகள் இருக்க வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

மே 25 முதல்
மே 25 முதல் நடைமுறைக்கு வந்த புதிய சமூக ஊடக சட்ட விதிகளின் படி, பயனர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் புகார்களைத் தீர்ப்பதற்கான குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டியது சமூக ஊடக நிறுவனங்களுக்கு கட்டாயம் ஆகும். அதாவது 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர் தளங்களைக் கொண்ட அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் புகார்களைக் கையாள்வதற்கு அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆரம்பமே பிரச்சனை
ஆனால் ஆரம்பம் முதலே புதிய சமூக ஊடக சட்ட விதிகளை ஏற்க முடியாது என்று பிடிவாதம் பிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், நீதிமன்றத்தையும் நாடியது. இந்நிலையில் நாட்டின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றத் தவறியதற்காக மத்திய அரசு ட்விட்டரை கடுமையாக எச்சரித்தது. இந்த சூழலில் ட்விட்டர் நிறுவனம் நியமித்த புதிய குறைதீர் அதிகாரி தர்மேந்திர சதுர் பதவி விலகி உள்ளார். என்ன காரணம் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications