தாமரை விதை.. பட்ஜெட்டில் பீகாருக்கு நிர்மலா கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்! நினைத்ததை சாதித்த நிதிஷ்குமார்
டெல்லி: 2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் பீகாரில் தாமரை விதை (மக்கானா) வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். வடமாநிலங்களில் தாமரை விதை உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் அதன் மதிப்பு கூட்டல், திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த வாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். பாஜக, நிதிஷ்குமாரின் ஆதரவோடு தான் 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் பட்ஜெட்டை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இருந்த போதும், பட்ஜெட்டை உரையை தொடர்ந்து வாசித்த நிர்மலா சீதாராமன்," பீகார் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார். விவசாயம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தான் கவனிக்க வைத்துள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் தாமரை விதை உற்பத்தி அதிகமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பீகாரில் தாமரை விதை உற்பத்தி, செயலாக்கம், மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மக்கானா வாரியம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார.

விவசாயிகளை கூட்டுறவு சங்கங்களாக ஒருங்கமைத்து பயிற்சியளித்து அரசு திட்டங்கள் மூலம் அவர்கள் பயனடையும், மக்கானா விதை விற்பனை மதிப்பு கூட்டல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கான பயிற்சியை வழங்கும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கானா விதை உற்பத்தியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதை வட மாநிலங்களில் பாரம்பரிய சிற்றுண்டி ஆக பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் குறிப்பாக பீகார் மாநிலத்தில் இதன் உற்பத்தி மிக அதிகமாக இருக்கிறது. தாமரை செடியில் 40 நாட்கள் முதிர்ச்சி அடைந்த விதைகள் உலர்த்தப்பட்டு தீயில் வறுக்கப்படும்போது அதிலிருந்து பொறி போல வெளிவருவது தான் மக்கானா. தற்போது உலக அளவில் ஊட்டச்சத்து மிகுந்த உணவாக பார்க்கப்படுகிறது.
இதனால் அதன் உற்பத்தி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் மக்கானா உற்பத்தியும் விற்பனையும் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் போதிய பெரும்பான்மை பெற முடியாததால் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது பீகாருக்கும் ஆந்திராவுக்கும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டது. தற்போதும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்றிருக்கிறார் நிதிஷ். மேலும் பீகாரில் தேசிய உணவு தொழில் நுட்ப மையம், தொழில் முனைவு மற்றும் வேளாண்மை நிறுவனம் நிறுவப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கூட்டணி ஆட்சியில் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று சாதித்து இருக்கிறார் நிதிஷ்குமார்.












Click it and Unblock the Notifications