ஜன. 29-ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குகிறது- பிப். 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ல் தொடங்குகிறது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா பரவலை முன்வைத்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. ஆனால் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது என்பது எதிர்க்கட்சிகளின் புகார்.
இந்த நிலையில் நடப்பாண்டின் முதலாவது பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஜனவரி 29-ந் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.
அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடரானது 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. ஜன. 29 முதல் பிப். 15 வரை முதல் கட்டமாகவும் மார்ச் 8 முதல் ஏப். 8 வரை 2-ம் கட்டமாகவும் இக்கூட்டத் தொடர் நடைபெறும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.