மத்திய அரசு பணியாளர் திறனை மேம்படுத்த கர்மயோகி திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேபடுத்துவதற்கான கர்மயோகி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பின்வரும் நிறுவன கட்டமைப்பின் கீழ் அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்ட செயல்படும்:
அ. பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு
ஆ. திறன் வளர்த்தல் ஆணையம்
இ. டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்க சிறப்பு நோக்கு அமைப்பு
ஈ. அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு
எதிர்காலத்துக்கு ஏற்ற வகையில் இந்தியாவின் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாக, ஆக்கப்பூர்வமானவர்களாக, கற்பனைத்திறன் மிக்கவர்களாக, புதுமைகளை படைப்பவர்களாக, செயல்திறன் மிக்கவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக, முற்போக்கானவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, வெளிப்படைத்தன்மை மிக்கவர்களாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக தயார்படுத்துவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்.

அரசு ஊழியர் திறன் வளர்த்தல் திட்டங்களுக்கு பிரதமர் தலைமையிலான பொது மனிதவள மேம்பாட்டுக் குழு ஒப்புதலளித்து, கண்காணிக்கும்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த நவீன உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
"வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும் புதுமைகளை புகுத்துபவர்களாகவும் ஆக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.

கர்மயோகி திட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் அமைப்பு சார்ந்த திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான முழுமையான மற்றும் விரிவான சீர்திருத்தம் இது;
21-ஆம் நூற்றாண்டுக்கான மிகப்பெரிய சீர்திருத்தமான இந்த இயக்கம் புதிய பணி கலாச்சாரத்தை உருவக்கும்; இலக்கு சார்ந்த தொடர் பயிற்சிகள் அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்து, அதிகாரமளிக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், பொது மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
உலகத்தின் மிகப்பெரிய அரசு சேவைகள் சீர்திருத்த திட்டம் என்று கர்மயோகி இயக்கத்தை வர்ணித்த அவர், தனிப்பட்ட, துறை சார்ந்த மற்றும் செயல்முறை அளவிலான திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான விரிவான சீர்திருத்தம் இது என்றார். "அமைச்சரவையால் ஒப்புதலளிக்கப்பட்டுள்ள தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம், புதிய இந்தியாவின் எதிர்காலத்துக்குத் தயார் நிலையில் இருக்கும் அரசு சேவைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றும்," என ஜிதேந்திர சிங் மேலும் கூறினார். இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications