மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு.. மத்திய அரசு "இப்போது" அறிவிக்க காரணம் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் 70 வயதைக் கடந்த நாட்டின் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 70 வயதான அனைவருக்குமே இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம் வழங்கப்படும்; இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளில் இது ஒன்று. ஆனால் மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. தற்போது ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வருமான வரம்பு எதுவும் இல்லாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவர். இந்த இலவச மருத்துவ காப்பீடு ரூ5 லட்சம் மதிப்பிலானது என்றார்.
மேலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க, ரூ10,900 கோடி செலவிலான பிஎம் இ டிரைவ் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. வானிலை மாற்றங்களை எதிர்கொள்ள ரூ2,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications