மத்திய பாஜக ஆட்சியில் இலங்கை சிறையில் 141 தமிழக மீனவர்கள்- ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் ஒப்புதல்!
டெல்லி: மத்திய பாஜக ஆட்சியில் இலங்கை சிறையில் ஒரு தமிழ்நாட்டு மீனவர்கள் கூட இல்லை என பிரதமர் மோடி உள்ளிட்டோர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ர் கீர்த்தி வர்தன் சிங், இலங்கை சிறையில் 141 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
ராஜ்யசபாவில் தமிழக மீனவர்கள் தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விகள்:

- செப்டம்பர் முதல் நவம்பர் வரையில், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதல்வரிடமிருந்து அண்மையில் ஏதேனும் தகவல்கள் அல்லது கடிதங்கள் பெறப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்களைத் தெரிவிக்கவும்.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாரேனும் இன்றுவரை அங்கு சிறை வைக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார்களா? அவ்வாறாயின், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதற்கும், கைப்பற்றப்பட்ட படகுகளை மீட்பதற்கும் இந்தியா அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
- மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை புதிய ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்களைக் கூறவும்.
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்கள்:
- இந்திய மீனவர்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களிடமிருந்து அமைச்சகத்திற்கு தகவல்கள் வந்துள்ளன. இந்திய மீனவர்கள் பன்னாட்டு கடல் எல்லையைத் தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை அதிகாரிகளால் அவ்வப்போது கைது செய்யப்படுகின்றனர்.
- 22 நவம்பர் 2024 நிலவரப்படி, 141 இந்திய மீனவர்கள் இலங்கை அரசின் காவலில் உள்ளனர். அவர்களில் 45 மீனவர்கள் விசாரணையில் உள்ளனர். 96 பேர் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். மொத்தம் 198 இந்திய மீன்பிடிப் படகுகள் தற்போது இலங்கைக் காவலில் உள்ளன. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரகத்தினால் தேவையான அனைத்துசட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
- மீனவர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்திய மீனவர்களை விரைவில் விடுவிப்பதற்கும், மீன்பிடிப் படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதி, கொழும்புக்குச் சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின் புதிய ஜனாதிபதியைச் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மீனவர் பிரச்சினையை மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார பிரச்சினையாகக் கருத வேண்டும் என்று இலங்கை அரசிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான முழு அளவிலான பிரச்சனைகள் குறித்து தமிழக அரசின் பிரதிநிதிகள் அடங்கிய மீன்வளத் துறைக்கான இருதரப்பு கூட்டுப் பணிக்குழுவினர் விவாதித்து வருகின்றனர்.
- 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மீன்பிடி தொடர்பான கூட்டுக் குழுக் கூட்டத்தில் மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இவ்வாறு மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications