ரூ.25 லட்சம் ஒதுக்கீடு.. மன்மோகன் சிங் நினைவிடத்துக்கு இடம் வழங்கிய மத்திய அரசு.. எங்கு தெரியுமா?
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நினைவிடத்தின் அருகே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கி உள்ளது. இந்த இடத்தில் தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்பட பல பிரதமர்களின் நினைவிடம் அமைந்துள்ளது.
நம் நாட்டின் பிரதமராக 2 முறை பதவி வகித்தவர் மன்மோகன் சிங். 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நம் நாட்டின் பொருளாதாரத்தில் சீர்த்திருத்தம் கொண்டு வந்தார்.

92வது வயதில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் மன்மோகன் சிங் காலமானார். வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் காலமானார். அதன்பிறகு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. முமு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் யமுனை ஆற்றின் கரையோரம் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. இதுதொடர்பான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதியிருந்தார். அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. நினைவிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தது.
அதன்படி மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் ஒதுக்க மத்திய அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லி ராஷ்ட்ரிய ஸ்மிருதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களின் இறுதி அஞ்சலி நடக்கும். அதேபோல் நினைவிடங்கள் அமைந்துள்ளது. யமுனை ஆற்றின் கரையோரம் இந்த இடம் உள்ளது.
இங்கு இப்போது 7 தலைவர்களின் நினைவிடங்கள் உள்ளன. முன்னாள் பிரதமர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், பிவி நரசிம்ம ராவ், சந்திர சேகர், ஐகே குஜ்ரால் உள்ளிட்டவர்களின் நினைவிடங்கள் உள்ளன. அதேபோல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நினைவிடம் இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியின் நினைவிடத்தின் அருகே மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு நிலம் ஒதுக்கி உள்ளது.
முன்னதாக மத்திய அரசு சார்பில் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்ய வரும்படி அவரது குடும்பத்துக்கு கடந்தமாதம் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் குடும்பத்தினர் வரவில்லை. இதனால் மத்திய அரசே இடம் தேர்வு செய்துள்ளது. அதோடு நினைவிடம் அமைக்க ரூ.25 லட்சத்தை ஒதுக்கி உள்ளது.
இதுதொடர்பாக மன்மோகன் சிங்கின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்த இடம் இறுதி செய்யப்படும். மேலும் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறக்கட்டளை ஒன்றை அமைக்கும்படி மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை அமைக்கும் பட்சத்தில் மத்திய அரசு ரூ.25 லட்சத்தை மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அறக்கட்டளையிடம் வழங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications