அடேங்கப்பா.. 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்கு மட்டுமே மத்திய அரசு செலவழித்தது எவ்வளவு தெரியுமா?
டெல்லி: மத்திய அரசு சார்பில் நீதிமன்ற வழக்குகளுக்காக கடந்த 10 ஆண்டுகளில் ரூ.409 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அதேபோல் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எதிராகவும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது

இத்தகைய வழக்குகளின்போது சம்பந்தப்பட்ட அரசுகள் பணம் செலவழித்து வழக்குகளை நடத்துகின்றன. இல்லாவிட்டால் வழக்குகளை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் தான் தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014 -2015 நிதியாண்டில் நீதிமன்ற வழக்கிற்காக ரூ.26.64 கோடி செலவு செய்யப்பட்டது. இது கடந்த 2015-16 ஆண்டில் ரூ.37.43 கோடியாக இருந்தது.
2014 -15 நிதி ஆண்டு முதல் 2023-2024 நிதி ஆண்டு வரை கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு வழக்கு செலவிற்காக ரூ.409 கோடியை செலவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 2023-24ம் நிதியாண்டில் வழக்குகளுக்கு மத்திய அரசு மொத்தம் ரூ.66 கோடியை செலவு செய்துள்ளது. இது முந்தை நிதியாண்டை ஒப்பிடும்போது ரூ.9 கோடி அதிகமாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ராஜ்யசபாவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீதிமன்றங்களில் மத்திய அரசு தொடர்புடைய வழக்குகளின் நிலுவை விபரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‛‛நீதிமன்றங்களில் 7 லட்சம் வழக்குகளில் மத்திய அரசு ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சம் என்றால் மத்திய நிதித்துறை மட்டும் ரூ.1.9 லட்சம் வழக்குகளில் ஒருதரப்பாக சேர்க்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமின்றி, ‛‛நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கக தேசிய வழக்கு கொள்கை ஒன்று வகுக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்கை என்பது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் உள்ளது. இதற்கான வரைவு பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்த பிறகு அமைச்சரவை ஒப்புதலுடன் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது'' என்று கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications