சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
கடந்த 5 நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
டெல்லி: அதானி பங்குகள் சரிவு, அவர் மீது இன்னும் செபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, அவரின் பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்வது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த கேள்விகளுக்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின.
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 மற்றும் 3ம் இடத்தில் மாறி மாறி இருந்து வந்த அதானி தற்போது 16வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு $65.6 பில்லியனாக உள்ளது. இதில் பெரும்பாலான சொத்துக்கள் பங்குகள்தான் என்பதால் அவர் மேலும் சரிவை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
130 பில்லியன் டாலருக்கு அதிகமான சொத்துக்களை வைத்து இருந்த அதானியின் பங்குகள் அப்படியே பாதியாக குறைந்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹிண்டன்பர்க் இதுவரை பங்கு சந்தையில் செய்த சம்பவங்களில் இதுதான் மிகப்பெரிதாக பார்க்கப்படுகிறது.
பெரிய அடி! இனி ஆசியாவில் பெரிய பணக்காரர் அதானி இல்லை.. சில நாட்களில் தலைகீழ் மாற்றம்! அடபாவமே
ஹிண்டன்பர்க்
ஹிண்டன்பர்க் வெளியிட்ட 413 பக்க ஆய்வறிக்கையில், அதானி கடந்த மூன்றாண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருந்தது. அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் சரமாரி புகார்களை வைத்து உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக சரிந்து வருகின்றன. அதானி நிறுவனம் தனது வருமானத்தை பொய்யாக உயர்த்தி காட்டி உள்ளது, உறவினர்களை பயன்படுத்தி போலியான நிறுவனங்களை வெளிநாட்டில் தொடங்கி போலி பரிவர்த்தனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் பங்குகளை பொய்யாக உயர்த்தி அதை வைத்து கடனும் வாங்கி உள்ளது, அதாவது பொய்யாக கொண்டு வரப்பட்ட முதலீடுகள் மூலம் பொய்யாக உயர்த்தப்பட்ட பங்குகளை வைத்து கடன் வாங்கி உள்ளது.
அதானி பங்குகள்
கையில் பணமே இல்லாமல் எல்லாம் பொய்யான முதலீடுகள் மூலம் வரவு செலவு இருப்பதாக காட்டி ஏமாற்றி உள்ளது. தனது வரவு செலவு அறிக்கையில் மோசடி, வரி ஏய்ப்பு, மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது என்று புகார்களை அதானி குழுமம் மீது இந்த ஹிண்டர்ன்பர்க் வைத்தது. இதனால் அதானி மீது சரமாரி புகார்கள் அடுக்கப்பட்டு உள்ளன. இரண்டு ஷெல் நிறுவனங்கள் மூலம் அதானி தங்கள் உறவினர்களை வைத்து தங்கள் பணத்தையே அதானி நிறுவனத்தில் முதலீடு செய்து பொய்யாக வரவு செலவு கணக்கு காட்டியதாக இன்று போர்ப்ஸ் நிறுவனமும் புகார் வைத்து உள்ளது.
பங்கு சந்தை
பங்கு சந்தையே இப்போது ரத்தக்களரியாக மாறி உள்ளது. அதானி குழுமம் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய சரிவை கடந்த 4 நாட்களில் சந்தித்து உள்ளது. இன்றும் அடிமட்டத்தை தொடும் வரை அதானி பங்குகள் சரிந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 6.50 லட்சம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு குழுமத்தின் பங்கு 4 நாட்களில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்ததே இல்லை. அதிலும் நேற்று அதானி குழுமத்தின் பங்குகள் எல்லாம் மிக மோசமாக சரிந்துள்ளன. கடந்த 4 நாட்களில் அதானியின் டோடல் கேஸ் பங்குகள் மட்டும் 55 சதவிகிதம் சரிந்துள்ளன. அதானி குழுமத்தின் பங்குகள் உண்மையான நிலையை அடையும் வரை அவர் தொடர்ந்து சரிந்து கொண்டேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றம்
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. அதானி பங்கு சரி ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் கட்சிகள் இரண்டு அவையிலும் கோஷம் எழுப்பின. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு இரண்டு அவைகளும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஎம் சு வெங்கடேசன் செய்துள்ள ட்விட்டில், அதானியின் பங்குச்சந்தை முறைகேடு குறித்து கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு. உண்மையை வெளிக்கொண்டுவர போராடுகிறோம். அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு அவையை முடக்குகிறது. இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு, என்று குறிப்பிட்டு உள்ளார்.