பலாத்காரம்: 2 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்.. மீறினால் போலீஸ் மீது நடவடிக்கை.. மத்திய அரசு
டெல்லி: பாலியல் குற்றச் சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளது.
உ.பி. ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில்தான், உ.பி. மட்டுமல்லாது, நாடு முழுக்க பாலியல் குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளதால் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடயங்களை சேகரித்து விரைந்து வழக்கை செயல்படுத்தவும், பலாத்கார வழக்கு விசாரணையை 60 நாட்களுக்குள் (2 மாதங்கள்) முடிக்குமாறும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தகவல்கள் பாதுகாப்பு
பலாத்கார சம்பவம் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரின் அனுமதியோடு, உரிய மருத்துவரைக் கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

போலீஸ் மீது நடவடிக்கை
இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் ஏதேனும் தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை
இதனிடையே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாடு முழுக்க, 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் பலாத்காரங்கள்
கடந்த மாதம் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பலாத்கார வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. இது 2018ம் ஆண்டைவிட 7 சதவீதத்திற்கும் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட பலாத்காரம் அதிகரித்திருந்தது. 2017ல் 32,559 வழக்குகளும், 2018ல் 33,356 பலாத்கார வழக்குகளும் நாடு முழுக்க பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications