முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு டெல்லியில் நினைவிடம் - மத்திய அரசு முடிவு
டெல்லி: கடந்த டிசம்பர் மாதம் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ்- பாஜக இடையே வார்த்தை மோதல் வெடித்த சூழலில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கும் இடம் தேர்வு தொடர்பாக பாஜக - காங்கிரஸ் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ராஜ்காட்டின் ஒரு பகுதியான ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் இந்த நினைவிடம் அமைய உள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது தொடர்பான தகவலை பகிர்ந்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, "எனது தந்தையின் நினைவுகளை பெருமை படுத்தும் முடிவினை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஷர்மிஸ்தா முகர்ஜி கூறியிருப்பதாவது:-
எனது தந்தைக்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் கோரிக்கை எதுவும் வைக்காமலே அரசு இந்த முடிவை எடுத்து இருப்பது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அரசு மரியாதை என்பது கேட்டு பெறக்கூடாது.. தானாக கிடைக்க வேண்டும் என்று எனது தந்தை கூறுவார். எனது தந்தையின் நினைவுகளை பெருமை படுத்தும் முடிவினை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மகளாக எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதிச்சடங்கு டெல்லியில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் நடைபெற்றது. மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்கும் இடத்தில் இறுதிச்சடங்கை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அதேபோல, மத்திய அரசை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், " மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு தகுந்த இடத்தை மத்திய அரசு கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என சாடினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்டும் விவகாரம் அரசியல் ரீதியாக விவாதப்பொருளாகியுள்ள நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நினைவிட கட்ட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்த பிரணாப் முகர்ஜி, பொறுப்புகளிலும் இருந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இவரது பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சி காலத்தில், குடியரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 2020 ஆகஸ்ட் 31 ஆம் தேதி மரணம் அடைந்தார். முன்னதாக, தனது தந்தை இறந்த போது காங்கிரஸ் காரிய கமிட்டி சார்பில் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தப்படவில்லை என்று பிரணாப் முகர்ஜியின் மகள், குற்றம்சாட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications