உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாதவர்கள் இந்தியாவில் படிக்க முடியுமா? மத்திய அரசு சொன்ன பதில்
டெல்லி: உக்ரைனில் மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை படிக்க முடியுமா? இல்லையா? என்பது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய அரசு விரிவான விளக்கம் அளித்துள்ளது.
ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. எழுப்பிய கேள்வியும் இது தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலும்: (அ) தங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன் உக்ரைனை விட்டு வெளியேறிய இந்திய மருத்துவ மாணவர்கள், நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் தங்கள் படிப்பைத் தொடர முறையீடு செய்திருக்கிறார்களா? (ஆ) அப்படியானால், அரசாங்கத்தின் பதில் என்ன? (இ) மற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு உதவுமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டதா? (ஈ) அப்படியானால், அரசாங்கத்தின் பதில் என்ன? (உ) உக்ரைனில் இருந்து வரும் மாணவர்கள் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் உள்ள தொடர்புடைய விதிகளை அரசு திருத்தம் செய்யுமா? (ஊ) அப்படியானால், அதன் விவரங்கள். இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் பதில்: (அ) முதல் (ஊ): பட்டப்படிப்பை முடிப்பதற்குள் உக்ரைனை விட்டு வெளியேறிய மருத்துவ மாணவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. வெளிநாட்டு மருத்துவ மாணவர்கள்/பட்டதாரிகள் "°கிரீனிங் டெ°ட் விதிமுறைகள், 2002" அல்லது "வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி உரிமம் விதிமுறைகள் - 2021" க்கு உட்படுபவர்கள்.

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956. தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் - 2019 மற்றும் வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளில் இது போன்ற விதிகள் எதுவும் இல்லை. எந்தவொரு இந்திய மருத்துவ நிறுவனம்/பல்கலைக்கழகத்திலும் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ மாணவர்களையும் இடமாற்றம் செய்ய தேசிய மருத்துவ ஆணையத்தால் அனுமதி வழங்கப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தேசிய மருத்துவ ஆணையம் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. இதன் கீழ் இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவப் படிப்பின் கடைசி ஆண்டில்,கோவிட்-19, ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற காரணங்களால் தங்கள் வெளிநாட்டு மருத்துவ படிப்பை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதன்பின்னர் 30 ஜூன் 2022 அன்று அல்லது அதற்கு முன் மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு அந்தந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களால் மருத்துவக் கல்வி முடிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அச்சான்றிதழ்கள் பெற்றவர்கள் மட்டும் இந்தியாவில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (FMG) கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டாய சுழற்சி மருத்துவப் பயிற்சி (CRMI) மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மருத்துவமனை பயிற்சி மற்றும் இந்திய நடைமுறை மருத்துவப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் கட்டாய சுழற்சி மருத்துவ பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சி முடித்த பின்னரே மருத்துவராகப் பதிவு பெறுவார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, மாணவர்களுக்கு டிரான்°கிரிப்ட் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களை சுமூகமான முறையில் வழங்குவதற்காக, கிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. இது தொடர்பாக ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க மாணவர்களுக்கு உதவ, தூதரகத்தின் இணையதளத்தில் விவரங்கள் கிடைக்கின்றன.
தேசிய மருத்துவ ஆணைய பொது அறிவிப்பில், குறிப்பிடப்பட்டுள்ளபடி 29 நாடுகளில் பொருந்தக்கூடிய மற்ற பல்கலைக்கழகங்களுக்கு உக்ரைன் வழங்கும் கல்வி இயக்கம் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லை என்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு பதிலளித்துள்ளது.












Click it and Unblock the Notifications