மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் விரைவில் கலைப்பு? மீண்டும் சமூக நீதி இலாகாவில் சேர்ப்பு?
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி ஆட்சியில் 2006-ல் உருவாக்கப்பட்ட மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் என்ற தனி அமைச்சகத்தை கலைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
2006-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இத்துறையின் முதலாவது அமைச்சராக இருந்தவர் ஏ.ஆர்.அந்துலே. அதன்பின்னர் சல்மான் குர்ஷித், ரஹ்மான்கான் ஆகியோரும் பாஜக ஆட்சியில் நஜ்மா ஹெப்துல்லா, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரும் இருந்தனர். தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூடுதல் பொறுப்பாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர், பார்சி மற்றும் ஜைனர்கள் நலனுக்காக இந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகைகள், நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் வக்பு வாரியம், சிறுபான்மையினர் தேசிய ஆணையம் ஆகியவையும் செயல்படுகின்றன. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து பிரிக்கப்பட்டுதான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
தற்போது மத்திய பாஜக அரசு இத்துறையை கலைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து இந்த துறையை உருவாக்கியது. சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சகம் வேண்டியது இல்லை; மீண்டும் சமூக நலத்துறையின் கீழ் அத்துறை செயல்படலாம் என்பது மத்திய அரசின் திட்டமாம்.
மத்திய அரசின் இத்திட்டத்துக்கு இப்போதே எதிர்ப்பு குரல்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வந்த உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் அனைத்துமே தொடரவே செய்யும்; மத்திய அரசு அவற்றை ரத்து செய்யாது; நிர்வாக வசதிக்கான ஒரு நடைமுறையாகவே இந்த மாற்றம் இருக்கும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications