தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு- வைகோவை இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுப்பு!
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான மத்திய அரசு தடை தொடர்பாக விசாரணை நடத்தும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயமானது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவை இடை மனுதாரராக சேர்க்க மறுத்துவிட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடர்பான வழக்கின் ஆவணங்களை வெளியே இருந்து ஆய்வு செய்யலாம் எனவும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயம் வைகோவுக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் Unlawful Activities (Prevention) Act (UAPA படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து இதன் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கடந்த மே மாதம் அறிவிக்கை வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகமானது, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்தும் உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த தீர்ப்பாயமானது, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது? விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்தியாவில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஜூலை மாதம் மனு அளிக்கப்பட்டது.
தற்போது இந்த சட்ட தீர்ப்பாயமானது, வைகோ வை இடை மனுதாரராக சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கின் ஆவணங்களை வெளியில் இருந்து ஆய்வு செய்து கொள்ளலாம் என வைகோவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. வைகோ தமது மனுவில் கடந்த 5 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடி தொடர்பில் இருந்தார் என்கிற ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டி இடை மனுதாரராக சேர்க்க தீர்ப்பாயம் மறுத்துள்ளது.
அதேநேரத்தில் இந்திய அரசால் அங்கீகாரம் பெறாத, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரனை மனுதாரராக சேர்ப்பது தொடர்பாகவும் சட்ட தீர்ப்பாயம் ஆலோசனை நடத்தியது.












Click it and Unblock the Notifications