இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது?.. குட் நியூஸ் சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்!
டெல்லி: இந்தியாவில் ஒருவழியாக கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இப்போதுதான் நல்ல செய்தியே வர ஆரம்பித்துள்ள நிலையில் விரைவில் 3-வது அலை தொடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் குண்டை தூக்கி வீசியுள்ளனர்.
அதுவும் கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகமாக தாக்க அதிக வாய்ப்புள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி
இதனால் பல்வேறு நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை விரைவாக அங்கீகரித்து வருகின்றன. மே மாதம் 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை அமெரிக்கா அங்கீகரித்தது. இதேபோல் சில ஐரோப்பிய நாடுகளும் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளன. ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவை பொறுத்தவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கோவாக்சின், சைகோவ்-டி
பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுக்கு செலுத்தி பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தியுள்ளது. இதேபோல் குஜராத்தின் அகமதாபாத் அருகே சங்கோதர் பகுதியில் இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனமும் தனது சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. இந்த இரன்டு நிறுவனங்களும் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

அடுத்த மாதம்
இந்த நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு அடுத்த மாத தொடக்கத்தில் அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். குழந்தைகளுக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி போடப்படும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பாஜக எம்.பி.க்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

பரிமாற்றத்தை உடைக்கும்
குழந்தைகளுக்கான தடுப்பூசி வைரஸ் பரிமாற்றத்தின் சங்கிலியை உடைப்பதற்கும், நாடு முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும் ஒரு பெரிய படியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தடுப்பூசிகள் குறித்த தேசிய நிபுணர் குழுவின் தலைவரான டாக்டர் என்.கே. அரோரா '12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு சைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தொடங்கும்' என்று தெரிவித்திருந்தார். எய்ம்ஸ் இயக்குனரான டாக்டர் குலேரியாவும் இந்த கருத்தையே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications