ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு.. பிரதமர் மோடி சொன்ன வார்த்தை! அடுத்த துணை ஜனாதிபதி யார்?
டெல்லி: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார். திடீரென்று அவர் ராஜினாமா செய்தது பேசுபொருளான நிலையில் இன்று அந்த கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்ட நிலையில் பிரதமர் மோடி, ஜெகதீப் தன்கர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.
நம் நாட்டின் ஜனாதிபதியாக திரெளபதி முர்மு உள்ளார். துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் இருந்தார். நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் தான் ராஜ்யசபா தலைவராக சபையை வழிநடத்துவார்.

அந்த வகையில் நேற்று ராஜ்யசபாவை ஜெகதீப் தன்கர் வழிநடத்தினார். அதன்பிறகு திடீரென்று அவர் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் வழங்கினார்.
தனது உடல்நல பிரச்சனைகளை காரணம் காட்டி அவர் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு இன்று ஏற்றுக்கொண்டது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்திய அரசியலமைப்பின் 67 (a) பிரிவின் கீழ் அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகதீப் தன்கரை புகழ்ந்து பதிவு செய்தார். அதில், ‛‛துணை ஜனாதிபதி உள்பட பல்வேறு பதவிகளின் மூலம் நம் நாட்டுக்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
ஜெகதீப் தன்கரின் ராஜினாமா காரணமாக ராஜ்யசபாவை அதன் துணை தலைவர் ஹர்வன்ஸ் வழிநடத்த உள்ளார். இன்றைய தினம் அவர் தலைமையில் தான் ராஜ்யசபா தொடங்கியது. மேலும் புதிய துணை ஜனாதிபதி யார்? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்போருக்கு சில முக்கிய தகுதிகள் தேவை.
அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவராக இருக்க வேண்டும் எந்தவொரு அரசுப் பதவியிலும் அவர் இருக்கக் கூடாது. இதுதான் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளாகும். துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற எம்பிக்கள் தான் தேர்வு செய்வார்கள்.
நம் நாட்டில் ராஜ்ய சபாவில் (மாநிலங்களை)245 எம்பிக்கள் உள்ளனர். லோக் சபாவில் இருந்து 543 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் தான் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தற்போது பாஜக கூட்டணிக்கு உள்ளது. இதனால் பாஜக கூட்டணி சார்பில் விரைவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் பாஜக மூத்த தலைவர்களான மனோஜ் சின்ஹா மற்றும் ஜேபி நட்டா உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தலாம். ஆனால் எதிர்க்கட்சிகளும் தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. இதனால் பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இதற்கான நடைமுறை விரைவில் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications