ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுகிறதா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?
டெல்லி: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது என்பது மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மேலும் மாநிலங்கள் ஒப்புக் கொண்டால் என்ன விகிதத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி விதிபது என முடிவு செய்வோம் என்றார் நிர்மலா சீதாராமன்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்களுடனான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா மற்றும் மேகாலயா முதலமைச்சர்கள், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா துணை முதலமைச்சர்கள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

53-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார். அப்போது, பால் கேன்களுக்கு (எஃகு, இரும்பு, அலுமினியம்) 12% ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது; சாமானிய மக்களுக்கு ரயில்வே வழங்கும் சில சேவைகளுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது; அனைத்து சூரிய சமையல் குக்கர்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை நிர்மலா சீதாராமன் விவரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்த சந்திப்பின் போது ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல்- டீசல் கொண்டுவரப்படுமா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல்- டீசல் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். ஆனால் இது மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்கிறது. மாநில அரசுகள் பரிந்துரைத்தால் பெட்ரோல்- டீசலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு விகிதம் விதிப்பது என முடிவு செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications