‛தகுதியில்லாதவர்’.. வாயை விட்ட டிஆர் பாலு.. லோக்சபாவில் என்ன நடந்தது? எல் முருகன் முக்கிய விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தின்போது மத்திய இணை அமைச்சர் எல் முருகனை பார்த்து திமுக எம்பி டிஆர் பாலு Unfit என கூறினார். இது நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் என்ன நடந்தது? என்பது பற்றி மத்திய இணையமைச்சர் எல் முருகன் விளக்கி உள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தன்னை பார்த்து இந்த வார்த்தையை பயன்படுத்தியதன் மூலம் திமுகவினரின் மனநிலையை உணர முடிகிறது என பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபாக்கள் கூடின. லோக்சபாவில் தமிழக வெள்ள பாதிப்பு குறித்த விவாதம் நடந்தது. திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், எம்பியுமான டிஆர் பாலு லோக்சபாவில் எழுந்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட்டதற்கு நன்றி தெரிவித்தார். அதோடு தமிழகத்தில் மழை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக கணித்து கூறவில்லை என குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமின்றி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் எனக்கூறி கொண்டிருந்தார். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டு சில கருத்துகளை முன்வைக்க முயன்றார்.
இந்த வேளையில் டிஆர் பாலு கடும் கோபமடைந்து உட்காரும்படி கூறினார். ஆனால் எல் முருகன் தொடர்ந்து பேச முயன்றார். இதனால் கோபத்தின் உச்சிக்கு போன டிஆர் பாலு, ‛‛நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit (தகுதியில்லாதவர்)'' என கூறினார். டிஆர் பாலுவின் இந்த பேச்சுக்கு லோக்சபாவில் ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் உள்ளிட்டவர்கள் டிஆர் பாலுவுக்கு எதிராக பேசினர். ஒரு தலித் அமைச்சரை எப்படி Unfit என சொல்லலாம்? ஒட்டுமொத்த தலித் சமூகத்தையே டிஆர் பாலு அவமானப்படுத்திவிட்டார். உடனடியாக டிஆர் பாலு மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக மற்றும் பாஜகவினர் இடையே வார்த்தை போர் நீடித்தது.
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். இதுபற்றி அவர் கூறியதாவது: வெள்ள பாதிப்பு குறித்து திமுக எம்பி டிஆர் பாலு நாடாளுமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்தார். இதனால் நான் குறுக்கீடு செய்தேன். அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்கட்டும் என டிஆர் பாலு கூறி இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை Unfit என்று கூறினார். என்னை Unfit என கூறியதன் மூலம் திமுகவினரின் உண்மை நிலையை உணர முடிகிறது.
அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரை திமுக அமைச்சராக்கவில்லை. ஆனால் பாஜக என்னை அமைச்சராக நியமனம் செய்துள்ளது. நான் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருக்கிறேன். தமிழ் மக்களின் குரலாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்பி இல்லாத நேரத்தில் வேறு மாநிலத்தில் இருந்து என்னை எம்பியாக்கி அமைச்சராக்கி உள்ளனர். இத்தகைய சூழலில் Unfit என்ற நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகளை என்னை பார்த்து பயன்படுத்தி உள்ளார். இப்போது டிஆர் பாலு வெளியே வந்து திசை திருப்புகிறார். திமுக எப்போதும் திசை திருப்பும் வேலைகளை தான் செய்கிறது'' என விளாசியுள்ளார்.












Click it and Unblock the Notifications