ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கு தளர்வு.. எதெல்லாம் செயல்படலாம்? தொழில் வர்த்தக சபை பரிந்துரை.. லிஸ்ட் இதோ
டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதி முதல், அன்லாக் 3.0 என்ற பெயரில், ஊரடங்கு உத்தரவில் சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதில் எந்த மாதிரி சலுகைகள் தரப்பட வேண்டும் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை (FICCI) சில பரிந்துரைகளை அரசுக்கு முன் வைத்துள்ளது.
கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் அதேநேரம், அனைத்து தொழில்களும் மீண்டுவரும் வகையில், ஊரடங்கு தளர்வுகள் இருக்க வேண்டும் என்பது, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் பரிந்துரையாக உள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலும் லாக்டவுன், உத்தரவுகள் தொடர்ந்து அமல்படுத்தப்படுவதால், பொருட்களுக்கான சப்ளை தடை படுவது, நிறுவனங்களில் நிலவும் பணி நீக்கங்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை அரசு கருத்தில் எடுக்க வேண்டும் என்றும், எப்ஐசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
ஓபிசிக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விரைந்து சட்டம் நிறைவேற்ற வேண்டும்: வேல்முருகன்
சர்டிபிகேட் போதும்
இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை முன்வைத்துள்ள பரிந்துரைகள் இவைதான்: வெளிநாட்டினரை இந்தியா வருகை தர அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களின் நாடு வழங்கிய ‘கோவிட் -19 நெகட்டிவ்' சான்றிதழை வைத்திருக்கும் சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கூடாது. வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகளுக்கு, நமது அரசு, கோவிட் -19 நெகட்டிவ் சான்றிதழை வழங்கும் சோதனை ஆய்வகங்களை அங்கீகரிக்க வேண்டும். அது மற்ற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி
சுற்றுலா, நினைவுச்சின்னங்கள், சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பார்களை திறக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெளிவான தேதிகளை அறிவிக்க வேண்டும். ஹோட்டல்களில் உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும். சமூக விலகல் விதிமுறைகளையும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்காணித்து இந்த அனுமதிகளை வழங்கலாம். 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கலாம்.
ஹோட்டல்களில் நிகழ்ச்சிகள்
திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு ஹோட்டலில் அனைத்து வகையான விருந்து மற்றும் கான்பரன்ஸ் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். 50 சதவிகிதம் அளவுக்கு மட்டும் ஆட்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இப்படியாவது ஹோட்டல்களுக்கு கொஞ்சம் வருமானம் கிடைக்க வழி செய்ய வேண்டும். மாநில எல்லைகளை சுற்றுலா பயணிகளுக்காக ஓபன் செய்ய வேண்டும். பார்கள் திறக்க அனுமதிக்க வேண்டும். ரூம் சர்வீஸ் மூலம் அறைகளில் பொருட்களை சப்ளை செய்யலாம்.
தியேட்டர்கள் வழிகாட்டு நெறிமுறை
தியேட்டர்கள் மற்றும் கலாச்சார மையங்கள் திறக்கப்பட வேண்டும். அனைத்து நபர்களையும் தியேட்டருக்குள் நுழையும்போது கட்டாயமாக காய்ச்சல் பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும். தியேட்டர்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கடுமையான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். என்ட்ரி மற்றும் எக்சிட் பகுதிகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க, போதுமான நேர இடைவெளியுடன் திரைப்படங்களை திரையிட வேண்டும்.
சானிட்டைசர்கள்
தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கு முகக் கவசம் கட்டாயம். தியேட்டர் இருக்கைகள் சுத்திகரிக்கப்பட வேண்டும். மக்களுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒரு இருக்கை இடைவெளி இருக்கலாம். தியேட்டர் மற்றும் கலையரங்கங்களில் 50 சதவிகிதம் நபர்களுக்கு மட்டுமே அமர இடம் கொடுக்க வேண்டும். அனைவரும் பயன்படுத்தும் வகையில் பொது இடத்தில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்லாக் 3.0
தியேட்டர், ஜிம், வெளிநாட்டு விமானச் சேவை ஆகியவை மட்டுமே இப்போது செயல்படாமல் உள்ளன. அன்லாக் 3.0 காலகட்டத்தில், அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி முதல், இவற்றுக்கும், அனுமதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையேதான், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் இவ்வாறு ஒரு பரிந்துரையை முன் வைத்துள்ளது. இதை அரசு பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.