உ.பி.யில் படுதோல்வியடையும் காங்கிரஸ்.. லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டம்? எடுபடாத பிரியங்கா மேஜிக்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜகவும் ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது.
Recommended Video
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது. இதையடுத்து 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான அரசு அமைந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மற்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் ஒவ்வொன்றாக காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்டது.
மொத்தம் உள்ள 31 மாநிலங்களில் பாஜக 12 இடங்களிலும், பாஜக கூட்டணி 6 இடங்களிலும் காங்கிரஸ் தனித்து 3 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 3 இடங்களிலும் உள்ளது.

2019 லோக்சபா தேர்தல்
2019 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்தது. அக்கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி இருந்து வந்த நிலையில் அக்கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் என்ற அழைப்பின் பேரில் அவர் தலைமை பொறுப்பேற்றார். ஆயினும் 2019 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகு ராகுல் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர்
இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் இடைக்காலத் தலைவராக சோனியாவே தொடர்கிறார். தொடர் தோல்வியால் காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டே போகிறது. இதனால் 2024 லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பிரியங்கா காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.

வெள்ளோட்டம்
இதற்கான வெள்ளோட்டமாக உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலை கையில் எடுத்தது. இந்த மாநில தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சியே மத்தியில் ஆட்சி செய்யும் என்பது இதுவரை யாரும் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதனால்தான் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் முகாமிட்டுள்ள பிரியங்கா காந்தியும் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியும் மோடி அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் மீதான தாக்குதல், இந்திய - சீனா எல்லை பிரச்சினை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அருணாச்சலில் சீனா கட்டி வரும் கிராமங்கள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பி அதையே தேர்தல் பிரச்சாரங்களிலும் முன் வைத்து வருகிறார்கள்.

சட்டம் ஒழுங்கு மோசம்
உ.பி. யில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதையும் சுட்டிக் காட்டும் இவர்கள் அங்கு அவ்வப்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும் தோலுரித்து காட்டி வருகிறார்கள். உ.பி.யில் விவசாயிகள் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காண சென்ற போது பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டார்.

காங்கிரஸின் தலைவிதி
அப்போது சோனியா, ராகுல் ஆகியோர் காங்கிரஸை வளர்க்க சோபிக்க முடியாத நிலையில் தற்போது பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கோட்டை விட்டுள்ளது. பாஜகவோ 222 இடங்களில் அதாவது மெஜாரிட்டியை தாண்டி வெற்றி நடை போடுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் அரையிறுதி சுற்றாக பார்க்கப்பட்டு இன்த தேர்தல்தான் காங்கிரஸின் தலை விதியை தீர்மானிக்க போகிறது என கருதப்பட்டது. ஆனால் உ.பி. மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவே சந்தித்து வருகிறது. இதனால் இந்த தேர்தலுடன் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதும் நிலை வந்துவிட்டது. லோக்சபா தேர்தலுக்கான வெற்றியை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. உ.பி. மட்டுமல்லாமல் உத்தரகாண்ட், பஞ்சாப, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு பின்னடைவு என்பதால் காங்கிரஸ் அல்லாத 3ஆவது அணி வலுப்பெறும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.












Click it and Unblock the Notifications